இஸ்ரோ தலைவராக தமிழர் இருக்கும்போது அண்ணா பல்கலை. துணை வேந்தராக சூரப்பா இருக்க கூடாதா? தமிழிசை கேள்வி
Recommended Video
சென்னை: மாணவர்களுக்கு சிறப்பான வழிகாட்டுதல் தேவை. அதற்காகவே அண்ணா பல்கலை. துணை வேந்தராக சூரப்பா தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
பாஜக நிறுவன நாளையொட்டி, சென்னையிலுள்ள அக்கட்சி தமிழக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கட்சி கொடியேற்றினார்.
பின்னர் நிருபர்களிடம் தமிழிசை கூறியதாவது:
கிளர்ச்சி களம்
தமிழகத்தை கிளர்ச்சி, போராட்ட களமாக வைத்திருக்க சிலர் விரும்புகிறார்கள். ஆக்கப்பூர்வமாக பணிகள் நடக்க வேண்டும் என்பதுதான் பாஜக விருப்பம். காவிரி மீட்டெடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை. காங்கிரசால் மறுக்கப்பட்ட காவிரி பாஜக ஆட்சியில்தான் பாய்ந்தோட போகிறது.
9ம் தேதி இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வர உள்ளது. நாங்கள் கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் என்று மட்டுமே கேட்கிறோம்.
குழப்பம் விளைவிக்கிறார்கள்
தமிழக உரிமையை தொலைத்தவர்களே நடைபயணம், ஆர்ப்பாட்டம் செய்துகொண்டு, வேண்டுமென்றே குழப்பம் விளைவிக்கிறார்கள். நாங்கள் மக்கள் உணர்வோடு ஒன்றியுள்ளோம். ஆனால் மக்கள் உணர்வுகளை திசை திருப்புவதை ஒப்புக்கொள்ள மாட்டோம்.
காவி மயம் இல்லை
பல்கலைக்கழகங்களை காவி மயமாக்கவில்லை. உண்மையில் இப்போதுதான், கல்வி மயமாக்குகிறோம். ஊழல்மயமாக இருந்த பல்கலைக்கழகங்கள் தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கர்நாடகாவை சேர்ந்தவரை நியமிப்பதா என கேட்கிறார்கள்.
தமிழ் துணை வேந்தர்கள்
ஆனால், பிரதமர் அலுவலகத்தில் தமிழ் அதிகாரிகள் பலர் பணியாற்றி வருகிறார்கள். இஸ்ரோ தலைவராக தமிழரான, சிவன் நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டின் பல பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் பதவிகளில் தமிழர்கள் உள்ளனர். மாணவர்களுக்கு சிறப்பான வழிகாட்டுதல் தேவை. அதற்காகவே அண்ணா பல்கலை. துணை வேந்தராக சூரப்பா தேர்வு செய்யப்பட்டுள்ளார். சூரப்பாவின் தேர்வை, அண்ணா பல்கலை. ஆசிரியர்கள் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. யார் வரவேற்க வேண்டுமோ அவர்கள் வரவேற்றுள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தில், 50 சதவீத மாணவர்கள் முதல் பருவத்தை கூட தாண்ட முடியவில்லை. அவர்களை தேற்றவே சூரப்பா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திறமை அடிப்படை
திறமை அடிப்படையில்தான் துணை வேந்தர் தேர்வு நடக்கிறது. 2 வருடங்கள் காலியாக இருந்த பணியிடம் இப்போது நிரப்பப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களின் வேந்தர் ஆளுநர்தான். அவர் பல்வேறு கல்வியாளர்கள் பெயர்களை பரிசீலித்து சூரப்பாவை தேர்வு செய்துள்ளார். தயவு செய்து பல்கலைக்கழகங்களிலும் அரசியலை நுழைத்துவிடாதீர்கள். இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.