'திராவிட' மண்ணில் பாஜகவின் தமிழிசை சாதிப்பாரா?
சென்னை: தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முதலாவது பெண் தலைவராக 'காங்கிரஸ்' பாரம்பரியத்தைச் சேர்ந்த மருத்துவர் தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டிருப்பது முக்கியத்துவமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் 1967ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் பேரியக்கம்தான் கோலோச்சிக் கொண்டிருந்தது. ஆனால் இந்தி திணிப்புக்கு எதிராக தமிழக மாணவர்கள் நடத்திய பெரும் போரின் விளைவாக 'திராவிட' அரசியல் கட்சிகளின் ஆட்சிக்கு வித்திடப்பட்டது.
அன்று முதல் இன்று அரை நூற்றாண்டுகாலமாக தமிழகத்தில் 'திராவிட' அரசியல் கட்சிகள்தான் ஆட்சிக் கட்டிலில் அமர முடிகிறது. காங்கிரஸ் பேரியக்கத்தால் தலைகூட தூக்க முடியாத நிலைதான் இருக்கிறது.

முனைப்பு காட்டும் பாஜக
கடந்த 20 ஆண்டுகாலமாக தமிழகத்தில் வேர்பிடித்து நிற்கும் 'திராவிட' சிந்தனைக்கு முற்றிலும் எதிரான சிந்தனையை வழிமொழிந்து நடக்கும் பாரதிய ஜனதா 'மாற்று அரசியலுக்கு' முனைப்பு காட்டி வருகிறது.

தலைவராக தமிழிசை
இந்நிலையில் பாரதிய ஜனதாவின் தமிழக தலைவராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரான குமரி அனந்தனின் மகள் தமிழிசை சவுந்திரராஜன் நியமிக்கப்பட்டிருக்கிறார். நிச்சயமாக பாஜகவில் ஒரு தரப்பினருக்கு இது புகைச்சலை உருவாக்காமல் இருக்கவே இருக்காது என்பதுதான் நிஜம்.

சில அடிப்படை மாற்றங்கள்
அதுவும் பாரதிய ஜனதாவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைந்து பணிபுரியாத ஒருவர், குறிப்பாக காங்கிரஸ் பாரம்பரியத்தைச் சேர்ந்த ஒருவர் தலைவராகி இருக்கிறார். அத்துடன் "பெண்" ஒருவரை தமிழகத்தின் தலைவராக்கியிருக்கிறது பாரதிய ஜனதா. இந்த இரண்டு அம்சங்களும் பாரதிய ஜனதா கட்சியின் மேலிடத்தின் 'அரசியல் காய்நகர்த்துதலின்' உத்தியை வெளிப்படுத்துகிறது என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத பாஜகவின் முன்னாள் நிர்வாகி ஒருவர். மேலும் பாரதிய ஜனதாவின் தமிழக முகங்களில் அதிகம் அறியப்பட்டவரில் ஒருவராக ஊடகங்களில் நாள்தோறும் வலம் வந்தவர் தமிழிசைதான் என்பதும் சுட்டிக்காடப்படுகிறது.

அரசியல் சூட்சுமங்களை..
என்னதான் உட்கட்சி 'எரிச்சல்' இருந்தாலும் ஒரு காங்கிரஸ் தலைவரின் மகள் என்பதால் 'அரசியல் சூட்சுமங்களை' நிச்சயம் கற்றுக் கொண்டவர்தான் தமிழிசை என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். அதாவது முந்தைய பாஜக தலைமைகளால் அதிருப்தி அடைந்தவர்கள், பாஜகவுக்காக பணியாற்ற துடிப்பவர்கள் என்கிற செக்டாரை ஒவ்வொரு மாவட்டத்திலும் அடையாளம் கண்டு அவர்களுடன் இணக்கமான உறவுச் சூழலை வளர்த்து தனக்கான 'தொண்டர் பலத்தை' உருவாக்கி வைத்திருக்கிறார் தமிழிசை என்றும் கூறப்படுகிறது.

தலைவர் பதவி அதிகம்...
அதே நேரத்தில் 'தமிழிசை'யைப் பொறுத்தவரையில் பேச்சுதானே தவிர.. நிச்சயமாக அவருக்கு 'தலைவர்' பதவி என்பதெல்லாம் மிக மிக அதிகம். அவருக்கு அத்தகைய தகுதி இருக்கிறதா என்பதைவிட 'எதையாவது தின்று பித்தம் தெளியலாம் என்பதைப் போல எதையாவது செய்து தமிழகத்தில் வேர்பிடிக்க வேண்டும் என்ற பாஜக அரசியலுக்கு அப்பால் வேறு ஒன்றும் இல்லை என்கின்றனர் மூத்த ஊடகவியாலாளர்கள்.

சாதிய கண்ணோட்டம்?
இதனால்தான் காலந்தோறும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு கை கொடுக்கிற ஒரு பெரும்பான்மை சாதியைச் சேர்ந்தவர் என்கிற ஒரு கண்ணோட்டத்திலும் 'தமிழிசை'யை பாஜக தேர்வு செய்திருக்கிறார்கள் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். அப்படி எனில் தமிழிசையின் நியமனத்தால் தமிழக பாஜக ஒரு படி முன்னேறுமா? என்ற கேள்விக்கு 'ஒன்றும் நடக்காது' என்கிற பதிலையும் முன்வைக்கின்றனர் சில அரசியல்பார்வையாளர்கள்.

மாற்றிக் கொள்ள விரும்புகிறது பாஜக?
அதே நேரத்தில் தமிழ் உணர்வு சார்ந்து, தமிழ் மொழி சார்ந்து இயங்கக் கூடிய தமிழிசையை தலைவராக நியமித்திருப்பதன் மூலம் தனது 'முகத்தை' மாற்றிக் கொள்ள பாஜக விரும்புகிறது என்பதும் வெளிப்படுகிறது.

சாதிப்பாரா?
திராவிட அரசியல் எனும் பெரும் ஆலமரம் மட்டுமே வேர்பிடித்து நிற்கும் தமிழகத்தில் பாரதிய ஜனதாவின் தலைவரான தமிழிசை எவ்வளவு தாக்குப் பிடித்து முன்னேறுகிறார் என்பதற்கு பதில் சொல்ல காலம் காத்திருக்கிறது...












Click it and Unblock the Notifications