தமிழக சட்டசபை ஜூலை 10ம் தேதி கூடுகிறது
சென்னை: தமிழக சட்டசபை கூட்டம் அடுத்தமாதம் 10ம் தேதி தொடங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த சட்டசபைக் கூட்டத்தில், பட்ஜெட் தாக்கலும், அதனைத் தொடர்ந்து அதன் மீதான விவாதமும் நடைபெற்றது.
இதற்கிடையே லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியானதால் பட்ஜெட் கூட்டத் தொடரின் துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம், வாக்கெடுப்பு போன்ற தொடர் நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது 16வது லோக்சபா தேர்தல் நடந்து முடிந்து மத்தியில் பாஜக தலைமையிலான புதிய அரசு அமைந்துள்ளது.

இந்நிலையில், தமிழக சட்டசபை கூட்டம் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதி மீண்டும் கூட உள்ளது. இது பற்றி சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 26 (1)-ன்கீழ், பேரவைத் தலைவர் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்த கூட்டத்தை, ஜூலை திங்கள் 10-ஆம் நாள் (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூட்டியுள்ளார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications