சேது சமுத்திர திட்டம்.. பாஜகவிற்குள் குழப்பம்? ஆதரித்த நயினார்.. விமர்சிக்கும் அண்ணாமலை
நெல்லை: சேது சமுத்திர திட்டத்தால் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களான கனிமொழி மற்றும் டி.ஆர்.பாலு ஆகியோருக்கு மட்டுமே லாபம் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சேது சமுத்திர திட்டத்திற்காக மத்திய அரசுடன் இணைந்து புதிய பாதையை கண்டறிய முயன்றால் தமிழ்நாடு பாஜக ஆதரவளிக்கும் என்று கூறிய அண்ணாமலை, ஆளுநர் மாளிகையில் நடந்த பொங்கல் விழாவுக்கான அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் சின்னம் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முன் வரவேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மான ஒருமனதாக நிறைவேறியது. அதிமுக, பாமக, விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தனர்.
இதுகுறித்து நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், சட்டசபையில் கொண்டு வரப்பட்ட சேது சமுத்திர திட்டத் தீர்மானத்திற்கு பாஜக ஆதரவு அளித்துள்ளது. 2008ல் இருந்து சேது சமுத்திர திட்டம் குறித்து தொடர்ந்து பேசி வருகிறோம்.

கனிமொழி, டி.ஆர்.பாலு
ராமர் பாலத்தை பாதிக்காமல் சேது சமுத்திர திட்டத்தை கொண்டு வந்தால் மட்டுமே பாஜக ஆதரவளிக்கும். இந்த திட்டம் மூலம் பெரிய பெரிய கப்பல்கள் வர முடியும் என்று கூறுகிறார்கள். சேது சமுத்திர திட்டம் கொண்டு வருவதால், தமிழக மீனவர்களுக்கு எந்த பயனும் இல்லை. இதன் மூலம் பயனடைய போவது இருவர் மட்டும் தான். அதில் ஒருவர் டி.ஆர். பாலு, மற்றொருவர் கனிமொழி மட்டும் தான். வேறு எந்த மீனவர்களுக்கோ, தொழில் முனைவோருக்கோ எந்த பயனும் இல்லை.

ராமர் பாலம் உண்மையா?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தில் பல்வேறு பொய்களை மறைத்துள்ளார். அந்த தீர்மானத்தில், இந்த திட்டம் அரசியல் காரணங்களுக்காக தள்ளிப்போடப்பட்டது என்று கூறியுள்ளார். ஆனால் உச்சநீதிமன்றத்தில் வாதாடி, வேண்டாம் என்று சொல்லிய பின், எப்படி அரசியல் காரணம் என்று சொல்லுகிறார். இரு நபர்கள் நடத்தக் கூடிய கப்பல் நிறுவனத்திற்கு மட்டுமே தான் லாபம். அதேபோல் மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங், ராமர் பாலம் இருக்கிறதா என்ற கேள்விக்கு, தெளிவான பதில் கிடையாது. ஏனென்றால் 18 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட காலம்.

அண்ணாமலை கேள்வி
இருக்கிறதா, இல்லையா என்பதை உறுதிபடுத்தவில்லை. ஆனால் அங்கு பாலம் இருந்ததற்கான அறிகுறிகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதில் இருக்கும் ஒரு வரியை வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். சேது சமுத்திர திட்டத்தின் செயல்படிவம் 4ஏ இல்லாமல், மத்திய அரசுடன் இணைந்து புதிய பாதையை கண்டறிந்தால் பாஜக ஆதரிக்கும். இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

தமிழ்நாடு சின்னம் புறக்கணிப்பு
தொடர்ந்து ஆளுநர் மாளிகை பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் சின்னம் புறக்கணிப்பு பற்றிய கேள்விக்கு, என்னை பொறுத்தவரை தமிழ்நாடு அரசின் சின்னம் போடப்பட்டிருக்க வேண்டும். தமிழ்நாட்டில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும், மாநில அரசு தான் முதன்மையாக இருக்க வேண்டும். ஆனால் தமிழ்நாடு அரசு குற்றம்சாட்டுவதற்கு முன், பிரதமர் மோடியின் புகைப்படத்தை தமிழ்நாடு அரசு ஏன் போடுவதில்லை என்று கேள்வியை முன் வைக்கிறேன். என்று தெரிவித்தார்.

z பிரிவு பாதுகாப்பு
தொடர்ந்து மத்திய அரசு வழங்கியுள்ள z பிரிவு பாதுகாப்பு குறித்த கேள்விக்கு, இந்தியாவிலேயே மிகவும் குறைவான நபர்களுக்கு மட்டுமே இவ்வகையிலான பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகளவிலான கட்டுப்பாடுகள் இருக்கிறது. எங்கு சென்றாலும் 48 மணிக்கு நேரத்திற்கு முன்னதாக தெரிவிக்க வேண்டும். அதேபோல் மத்திய அரசு வழங்கியுள்ள பாதுகாப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் காரணமின்றி மத்திய அரசு வழங்கி இருக்காது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications