மீனவர்கள் மீதான கடலோர காவல்படை தாக்குதல் குறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்
மீனவர்கள் மீதான தாக்குதலில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை : தமிழக மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை அத்துமீறி தாக்குதல் நடத்திய விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த 13ம் தேதி இந்தியக் கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் பிச்சை மற்றும் ஜான்சன் ஆகியோர் மீது அங்கு ரோந்து வந்த இந்தியக் கடலோரக் காவல்படையினர் தாக்குதல் நடத்தினர்.இதனால் இருவரும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த சம்பவத்தால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கொதிப்படைந்து இருக்கிறார்கள். தங்களைப் பாதுகாக்க வேண்டிய சொந்த நாட்டு கடலோர காவல்படையே தாக்கி உள்ளது அதிர்ச்சி அளிக்கிறது என்று அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இந்த விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.
அதில், ராமேஸ்வரம் மீன்பிடித்தளத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 6 பேரை இடைமறித்து, ராணி அபாகா என்கிற கப்பலில் வந்த கடலோர காவல்படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளார்கள். இதில் மீனவர்களின் படகில் இருந்து துப்பாக்கிக்குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இரும்பு உருளைகள் கொண்டு தாக்கியதில் மீனவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து மண்டபம் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தால் மீனவர்கள் பாதுகாப்பற்று உணர்கிறார்கள். கடலோர காவல்படையைக் கண்டித்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்து உள்ளனர்.
ஏற்கனவே இலங்கைக் கடல்படையினர், தமிழக மீனவர்களைத் தாக்கி அவர்களின் படகுகளைச் சேதப்படுத்தியும், கைது செய்தும் எங்களுக்கு இழைத்து வரும் இன்னல்களை நீங்கள் அறிந்து இருப்பீர்கள். இந்த நிலையில் இந்திய கடலோர காவல்படையும் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவது மீன்வர்களிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும். இனியும் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடாமல் இருக்க ராணுவ அமைச்சகத்திற்கு உரிய அறிவுரைகள் வழங்கிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.