வேட்பு மனு நிராகரிப்புக்கும் அதிமுகவிற்கும் தொடர்பில்லை... முதல்வர் பழனிசாமி தெளிவான விளக்கம்!
வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கும் அதிமுகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை : ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கும் அதிமுகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை எங்களுக்கு தெரிந்த ஒரே வேட்பாளர் அதிமுக வேட்பாளர் தான் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை தண்டையார்பேட்டையில் அதிமுகவின் தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய முதல்வர் பழனிசாமி, சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கும் அதிமுகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்.

நடிகர் விஷால் வேட்பு மனு விவகாரத்தில் யாரும் தலையிடவில்லை, வேட்பு மனு சரியாக பூர்த்தி செய்யப்படவில்லை என்றால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் அதைத் தான் இப்போதும் செய்துள்ளது. அதிகவினர் யாரும் தேர்தல் ஆணைய விதிகளை மீறி செயல்படக் கூடாது என்றும் முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்திய நாடே ஆர்கே நகர் இடைத்தேர்தலை உற்றுநோக்கிப் பார்த்துக கொண்டிருக்கிறது. வலுவான இயக்கமான அதிமுக ஜெயலலிதா இல்லாத நிலையில் இன்று தேர்தலை சந்திக்கிறது என்றும் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் மதுசூதனணை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார். அதிமுகவின் கோட்டை ஆர்.கே நகர் என்பதை இந்த முறையும் நிரூபிக்க வேண்டும், கடந்த முறை இரண்டாக பிளவு பட்டு இருந்தோம். இந்த முறை ஒற்றுமையாக உள்ளோம், அந்த ஒற்றுமை தான் நமக்கு பலம் என்று பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications