பருப்பு விலையைக் குறைக்கப் போவதாகச் சொல்லி நாடகமாடுகிறார் ஜெ... இளங்கோவன் தாக்கு
சென்னை: தமிழகத்தில் பருப்பு விலையைக் குறைக்கப்போவதாக சொல்லி மக்களை ஏமாற்றி முதல்வர் ஜெயாலலிதா நாடகம் ஆடுவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை இன்று சந்தித்தபோது இளங்கோவன் கூறியதாவது:
பருப்பு விலை கிலோ ரூ.52-ல் விற்பனை செய்யப்பட்டது இப்போது கிலோ ரூ.200-ஐயும் தாண்டிவி விற்பனை செய்யப்படுகிறது. மத்திய அரசிடம் இருந்து 500 டன் பருப்பு இறக்குமதி செய்துள்ளதாகவும், அதனால் பருப்பு விலை இனி குறைந்து விடும் என்றும் முதல்வர் ஜெயலலிதா கூறுகிறார். இது மக்களை ஏமாற்றும் செயலாகும்.

தமிழ்நாட்டில் 1 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன, இறக்குமதி செய்யப்பட்டுள்ள பருப்பு 1 லட்சம் பேருக்கு கூட போதாது. பருப்பு பதுக்கலுக்கு பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த வியாபாரிகளே காரணம். உண்மையான பதுக்கல்காரர்களை இன்னும் பிடிக்கவில்லை.
தமிழகத்தில் மக்கள் குடிநீர் பிரச்சினை, மின் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் தவித்து வருகின்றனர். இதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் முதல்வர் ஜெயலலிதா ஓய்வு எடுப்பதற்காக கொடநாடு சென்றுவிட்டார்.
இதேபோல் காங்கிரஸ் ஒருமுறை ஊட்டியில் சட்டசபை கூட்டத்தை நடத்திய போது எதிர்க்கட்சிகள் கேலி செய்தன. ஆனால் இப்போது ஜெயலலிதா அமைச்சர்கள் கூட்டத்தையும் அதிகாரிகள் கூட்டத்தையும் கொடநாட்டில் நடத்துகிறார். இது எந்த வகையில் நியாயம். உடனடியாக ஜெயலலிதா சென்னைக்கு திரும்பி மக்கள் பிரச்சினைகளை கவனிக்க வேண்டும்.
இலங்கையில் ராஜபக்சே அதிபராக இருந்தபோது நியமித்த குழுவே அங்கு போர்க்குற்றங்கள் நடந்திருப்பதை உறுதி செய்துள்ளன. அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே தண்டிக்கப்பட்டே தீரவேண்டும், என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications