ஆர்கே நகர் குறித்த கருத்துக் கணிப்புகளை நாளை முதல் 12-ந் தேதி வரை வெளியிட தேர்தல் ஆணையம் தடை!
ஆர்கே நகர் தேர்தல் குறித்து நாளை மாலை 5 மணியிலிருந்து 12ந் தேதி மாலை 5 மணி வரை எந்தக் கருத்துக் கருத்து கணிப்பையும் வெளியிடக் கூடாது என தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
சென்னை: ஆர்கே நகர் தேர்தல் குறித்து நாளை மாலை முதல் 12-ந் தேதி மாலை 5 மணிவரை எந்தக் கருத்துக் கணிப்பையும் வெளியிடக் கூடது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஆர்கே நகரில் வரும் ஏப்ரல் 12ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இத்தொகுதியில் நாளை மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆர்.கே.நகர் தொகுதி வாக்குப்பதிவு 12-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். நாளை மாலை 5 மணி முதல் வாக்குப்பதிவு முடிவடையும் வரையில் தேர்தல் தொடர்பான எந்தவொரு பொதுக்கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ பங்கேற்கவோ கூடாது.
வெளியேயிருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப்பணியாளர்கள் ஆகியோர் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் 10.04.2017 அன்று மாலை 5 மணிக்கு மேல் அந்தத்தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். கல்யாண மண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் யாரேனும் தங்கி இருக்கிறார்களா? என்பது கண்டறியப்படும்.
வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கும், வாக்குச்சாவடிகளிலிருந்து அழைத்துச்செல்வதற்கும் வேட்பாளர் அல்லது அவரது முகவர் வாகனத்தை வாடகைக்கு எடுப்பதற்கு, வாங்குவதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு எந்தவொரு வேட்பாளரும் அனுமதிக்கக்கூடாது. 10-ந்தேதி மாலை 5 மணி முதல் 12-ந்தேதி மாலை 5 மணி வரை கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிடுவதற்கு மற்றும் கருத்து கணிப்புக்களை நடத்துவதற்குதடைவிதிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.