இன்றே இந்த ஆஃபர் கடைசி.. பழைய ரூ.500, 1000 நோட்டுக்களை கொடுத்து இன்று மட்டும் மின்சார பில் கட்டலாம்
மின்சார பில், குடிநீர் வரி போன்றவற்றை பழைய ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தி இன்று மட்டும் கட்டிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரு நாள் மட்டும் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி மின்சார கட்டணம் செலுத்தலாம் என்று தமிழக மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் உள்ளாட்சித்துறைகள் உட்பட அரசு அலுவலகங்களில் கட்ட வேண்டிய வரி மற்றும் அபராத கட்டணத்தை பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளாக ஏற்றுக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மின்சார கட்டணம் செலுத்துவோர் இன்று மட்டும் (அதாவது, நவம்பர் 11ம் தேதி) இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம். ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, நவம்பர் 9ம் தேதி மின்சார கட்டணத்தை செலுத்துவதற்கு கடைசி நாளாக இருந்தவர்களுக்கு நவம்பர் 16ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டது. இந்த கால நீட்டிப்பு தொடர்ந்து அமலில் இருக்கும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பு கூறுகிறது.