வந்துருச்சு காவிரி- நடுஆற்றில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து கும்பிட்ட விவசாயிகள் - வைரல் வீடியோ
வறண்டு கிடந்த காவிரி நீர் வழியில் பல ஆண்டுகளுக்குப் பிறகு வந்த காவிரி நீரை விவசாயிகள் தலைவணங்கி வரவேற்கும் காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.
மயிலாடுதுறை : வறண்டு கிடந்த காவிரி நீர் வழித் தடத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு தவழ்ந்து வந்த காவிரி நீரை விவசாயிகள் தலை வணங்கி வரவேற்கும் காட்சிகள் டுவிட்டரில் வைரலாகி வருகிறது.
பருவமழை பொய்த்தது, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் தண்ணீர் தராத கர்நாடக அரசின் செயல்பாடு உள்ளிட்டவற்றால் சம்பா, குறுவை என இரண்டு போக சாகுபடியும் தமிழகத்தில் பொய்த்தது. சேலம், ஈரோடு வழியாக திருவாரூர், நாகை மாவட்டம் வழியாக கடைசியில் பூம்புகாரைச் சென்றடையும் காவிரி நீர்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே காவிரி நீர் வரத்து குறைவு, மழையில்லாததால் விவசாயிகளுக்கு ஏமாற்றமே கிடைத்தது. நீரின்றி காய்ந்து கருகிப் போன பயிர்களை பார்த்து வேதனையில் விவசாயிகள் மனம் நொந்து தற்கொலை என்னும் விபரீத முடிவையும் எடுத்தனர்.
கருணை காட்டிய இயற்கை
அரசுகள் அக்கறை காட்டாவிட்டாலும் இயற்கை கருணை காட்டியதன் விளைவாக கடந்த 10 நாட்களாக காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்த நிலையில் மயிலாடுதுறையில் நடைபெறும் காவிரி புஷ்கரம் விழாவிற்காக காவிரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
நெகிழ்ச்சி
காவிரி நீர் தாய் மெல்ல ஓடி வரும் அந்த அழகிய காட்சியை நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. மயிலாடுதுறையில் காவிரி நீர்வழிப்பாதையில் தவழ்ந்து வரும் காவிரித் தாயை விவசாயிகள் விழுந்து வணங்கியும், தலையில் அள்ளித் தெளித்துக் கொண்டும் மகிழ்ந்தனர்.
வைரல் வீடியோ
டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்களை குவித்து வைரலாகியுள்ளது. இதே போன்று ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட ரீடுவீட்டுகளையும் இந்த வீடியோ பெற்றுள்ளது.
நடந்தாய் வாழி காவிரி
நீரும் ஒரு வகை கடவுள் தான் விவசாயிகளுக்கு. காவிரி டெல்டாவை அழகாக்க அசைந்தோடி வரும் காவிரி நீர்த்தாயின் அழகிய வீடியோவை நீங்களும் பார்த்து மகிழுங்கள்.