பட்ஜெட்டில் தமிழ்நாடு ரயில்வே திட்டங்களுக்கு கிடைத்த நிதி எவ்வளவு தெரியுமா?
சென்னை: பொது பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. ரயில் திட்டங்கள் பற்றிய தகவல் நாளை வெளியாகும்.
தெற்கு ரயில்வேயின் பொதுமேலாளர் வஷிஷ்டா ஜோஹ்ரி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
மத்திய பட்ஜெட்டில், தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு ரூ.2,287 கோடியும், கேரளாவுக்கு ரூ.1,206 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் எந்தெந்த ரயில்வே திட்டங்களுக்கு எவ்வளவு நிதி? என்பது தொடர்பான விவரம் பிப்ரவரி 3ம் தேதி தான்தெரியவரும். தமிழகத்துக்கு புதிய ரயில்கள் இயக்குவது பற்றி ரயில்வே வாரியத்துக்கு நாங்கள் கோரிக்கைவிடுத்துள்ளோம்.
புது ரயில்கள் அறிவிக்கப்படுமா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும். ரயில்நிலையம் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் சென்னை சென்டிரல், கோழிக்கோடு ஆகிய 2 ரயில் நிலையங்கள் முதல் கட்டமாக நவீன வசதிகளுடன், தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தப்பட உள்ளது.
தாம்பரம் ரயில் நிலையத்தை முனையம் ஆக்குவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. வருகிற மார்ச் மாதத்துக்குள் இதற்கான பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வரும். மொரப்பூர்-தர்மபுரி மற்றும் திண்டுக்கல்-சபரிமலை இடையே புதிய வழித்தடம் அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்ய கடந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டது.
இதற்கான இறுதி ஆய்வு முடிந்து, விரைவில் புதிய வழித்தடம் அமைப்பது தொடர்பான ஆய்வறிக்கையை ரயில்வே வாரியத்திடம் சமர்ப்பிக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.