மேனகா காந்தியின் குற்றச்சாட்டுக்கு அதிமுக அரசின் பதில் என்ன?: கருணாநிதி கேள்வி
சென்னை: மத்திய அரசு ஒதுக்கிய நிதியை தமிழக அரசு முறையாகப் பயன் படுத்தவில்லை என்ற மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் குற்றச்சாட்டுக்கு அதிமுக அரசு என்ன பதில் சொல்லப் போகிறது என திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி - பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கேள்வி:- மத்திய அரசு ஒதுக்கிய நிதியை தமிழக அரசு முறையாகப் பயன்படுத்தவில்லை என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறாரே?
கலைஞர்:- இளம் பருவப் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் திட்டத்தின்கீழ், தமிழ்நாட்டுக்கு இந்த நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட 24.01 கோடி ரூபாயில், இதுவரை 7.82 கோடி ரூபாய் மட்டுமே தமிழக அரசினால் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அ.தி.மு.க. உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, மத்திய அரசின் பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்திருக்கிறார்.
வளர் இளம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் திட்டத்தின் கீழ் 11 முதல் 18 வயதான பெண்களுக்கு கல்வி, பாதுகாப்பு, வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதற்காக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழும் சில திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
இதற்காக மத்திய அரசு தரும் நிதியைக் கூட முறையாக தமிழக அரசு பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு அ.தி.மு.க. அரசு என்ன பதில் கூறப் போகிறது? தேசிய நெடுஞ்சாலைத்துறைப் பணிகளுக்காக 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை வரவேற்று ஒத்துழைத்திட தமிழக அரசு தயாராக இல்லை என்று மத்திய அமைச்சர் சொன்னதைக் குறிப்பிட்டு நான் எழுப்பிய குற்றச்சாட்டுக்கும் அ.தி.மு.க. அரசு இதுவரை பதிலளிக்கவில்லை.
இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications