கட்டண உயர்வை பூசி மெழுகும் அரசு... நவீன வசதிகளுடன் 2 ஆயிரம் பேருந்துகள் வாங்க திட்டமாம்!
பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து மக்கள் கொந்தளித்து வரும் நிலையில் படுக்கை வசதி, கழிப்பறை வசதியுடன் கூடிய 2 ஆயிரம் புதிய பேருந்துகளை இயக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: படுக்கை,கழிப்பறை வசதிகளுடன் கூடிய 2 ஆயிரம் பேருந்துகளை வாங்கி மக்கள் பயன்பாட்டிற்கு அளிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய பேருந்துகள் மே மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரும் என்றும் போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்துள்ள பேருந்து கட்டண உயர்வு முதல் வேலை நாளான இன்று மக்களை பெரிதும் வாட்டி வதைக்கும் விஷயமாக மாறியுள்ளது. இரட்டிப்பாகியுள்ள பேருந்து கட்டணம் நடுத்தர வர்க்கத்தினரையும், மாணவர்களையும் கடுமையாக பாதித்துள்ளது.
அரசின் இந்த முடிவை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள், மறியல்கள் அரங்கேறி வருகின்றன. ஆனால் மக்களின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்ப்பதாக தெரியவில்லை.
முடிவை மாற்றாத அரசு
ஆனால் மக்களின் போராட்டங்களை பற்றியெல்லாம் கவலைப்படாத அரசாக செயல்பட்டு வரும் தமிழக அரசு பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று விடாப்பிடியாக உள்ளது. எனினும் மக்களின் துளைத்தெடுக்கும் கேள்விகளில் இருந்து தப்பிக்க கட்டண உயர்வை பூசி மெழுகும் வேலையை செய்துள்ளது அரசு.
2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்க திட்டம்
தமிழகம் முழுவதும் ஓட்டை, உடைசல் பேருந்துகள் இயக்கத்தில் இருக்க தனியார் பேருந்துகளுக்கு நிகராக படுக்கை, கழிவறை வசதிகளுடன் புதிதாக 2 ஆயிரம் பேருந்துகளை வாங்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த சொகுசு பேருந்துகள் மே மாதம் முதல் பயன்பாட்டிற்கு வரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சென்னைக்கு 200 பேட்டரி பேருந்துகள்
இது மட்மின்றி சென்னையில் 200 பேட்டரி பேருந்துகளை மத்திய அரசின் பங்களிப்புடன் வாங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பணிகளும் தொடங்கிவிட்டதாக போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கட்டணம் எப்படி இருக்கும்?
புதிய பஸ் வாங்குறதெல்லாம் சரி, சரியான பராமரிப்பில்லாத பேருந்துகளின் கட்டணமே மக்களின் பாக்கெட்டை பதம் பார்க்கிறதே. இதுல அதி நவீன வசதியுடன் கூடிய பேருந்து வாங்கி பயன்பாட்டிற்கு விட்டால் அதன் கட்டணம் எவ்வளவு என்பது தான் மக்களின் கேள்வி?