வழக்கறிஞர்களின் திறமையான வாதத்தால் ஆந்திரா சிறையில் இருந்த 288 பேர் விடுதலை: தமிழக அரசு
சென்னை: தமிழக அரசு வழக்கறிஞர்களின் திறமையான வாதத்தால் ஆந்திரா சிறையில் இருந்த 288 தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஆந்திர மாநில வனப் பகுதியில் செம்மரங்களை வெட்டியதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பலர் ஆந்திர மாநில காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு ஆந்திர சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். இதனை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அவ்வாறு ஆந்திர சிறைகளில் உள்ளவர்களின் விவரங்களை ஆந்திரக் காவல் துறையினரிடம் இருந்து பெறுமாறு தமிழக காவல் துறை தலைமை இயக்குநருக்கு உத்தரவிட்டார்.

அதன்படி செம்மரம் வெட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு ஆந்திர சிறைகளில் உள்ள தமிழர்களின் விவரங்கள் காவல் துறை தலைமை இயக்குநரால் பெறப்பட்டது. அதன் அடிப்படையில், குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யாமல், 90 நாட்களுக்கு மேலாக ஆந்திர சிறைகளில் உள்ள தமிழர்களை சட்ட விதிகளின்படி உடனடியாக பிணையில் விடுவிக்கவும், அவர்களது வறிய நிலையினை கருத்தில் கொண்டு அவர்களின் வழக்குகளை நடத்த போதிய இலவச சட்ட உதவிகளை வழங்குமாறு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு 15.10.2015 அன்று கடிதம் எழுதினார்..
ஆந்திர சிறைகளில் உள்ளவர்களின் வறுமை நிலையைக் கருத்தில் கொண்டு அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து இலவச சட்ட உதவி கோரும் மனுக்களை பெறும்படி ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டிருந்தார்கள். அதன்படி, 312 கோரிக்கை மனுக்கள், மாவட்ட ஆட்சி தலைவர்களால் பெறப்பட்டு, அவை 29.10.2015 அன்று தலைமைச் செயலாளர் அவர்களால், மாநில சட்ட உதவி ஆணையம் மூலம், ஆந்திர மாநில சட்ட உதவி ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பின்னர் ஆந்திர சிறைகளில் உள்ளவர்களை பிணையில் கொண்டு வர இரண்டு அரசு வழக்கறிஞர்கள் தலைமையில் வழக்கறிஞர் குழு ஒன்று ஆந்திர மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு ஏற்படும் செலவினை ஈடு செய்ய முன்பணமாக 8 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் காரணமாக எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக, ஆந்திர சிறைகளில் இருந்த 172 தமிழர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
2013-ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் சேஷாசல வனப் பகுதியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு வன அலுவலர்கள் கொல்லப்பட்ட வழக்கில் 288 தமிழர்கள் மீது செம்மரக் கடத்தல் மற்றும் கொலைக் குற்றங்கள் சாட்டப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள 3-வது கூடுதல் குற்றவியல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்று வந்தன.
தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள் முகம்மது ரியாஸ் மற்றும் அருள் ஆகியோர் தலைமையிலான வழக்கறிஞர் குழு திருப்பதியைச் சேர்ந்த வழக்கறிஞர்களுடன் இணைந்து இந்த வழக்குகளில் வாதிட்டனர். 3.11.2015 முதல் 20 அமர்வுகளில் நடைபெற்ற நீதிமன்ற விசாரணையின் போது திறமையான வாதங்களை இந்த வழக்கறிஞர்கள் எடுத்து வைத்தனர்.
இதன் காரணமாக குற்றம் சாட்டப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 288 தமிழர்களும் இன்று (24.2.2016) திருப்பதி 3-வது கூடுதல் குற்றவியல் அமர்வு நீதிபதி அவர்களால் விடுதலை செய்யப்பட்டனர். தமிழக முதல்வர் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாகவே, கொலை மற்றும் செம்மரக் கடத்தல் ஆகிய குற்றங்கள் சாட்டப்பட்டு வழக்குகளை எதிர்கொண்ட தமிழ்நாட்டை சேர்ந்த 288 அப்பாவித் தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications