'எக்ஸ்ட்ரா' கேட்ட 22 ஆம்னி பஸ்களுக்கு ஆப்பு.. ஜெ.வுக்காக போராட்டம் நடத்தாதால் நடவடிக்கையா?
சென்னை: ஆம்னி பஸ்களின் பகல் கொள்ளை மற்றும் ராத்திக் கொள்ளை உலகறிந்த விஷயம். குறிப்பாக பண்டிகைக் காலங்களில் இவர்கள் தீவட்டிக் கொள்ளையர்களாக மாறி விடுவார்கள்.
பட்டாசு வெடிக்க வைத்துள்ள காசைக் கூட விடாமல் பிடுங்கும் நல்ல குணம் படைத்தவர்கள் ஆம்னி பஸ்காரர்கள். வருடா வருடம் இவர்களின் அட்டகாசம் கொடி கட்டிப் பறக்கும். ஆனாலும் நடவடிக்கை என்பது மிக மிக கம்மியே.
ஆனால் இந்த ஆண்டு 22 ஆம்னி பஸ்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அந்த பஸ்களுக்கான பெர்மிட்டையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப் போவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

களத்தில் குதித்த அதிகாரிகள்
ஆம்னி பஸ்களின் கட்டணக் கொள்ளையைத் தடுக்க சென்னை கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையம், எழும்பூர், தாம்பரம், பெருங்களத்தூரில் ஆம்னி பஸ்களை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தீவிர கண்காணிப்பு
மேலும் தமிழகம் முழுவதும் சுங்கசாவடிகளிலும் இந்த குழுக்கள் தீவிரமாக கண்காணித்தன. ஆனாலும் பொதுமக்களிடம் இருந்து அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார்கள் வந்தது.

22 ஆம்னி பஸ்கள் சிக்கின
கடந்த 3 நாட்களாக இரவு, பகலாக நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் தமிழகம் முழுவதும் 22 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை- கோவை
விதிகளுக்கு புறம்பாக செயல்பட்ட பல்வேறு காரணங்களுக்காக சென்னை, கோயம்புத்தூர், மார்த்தாண்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து புறப்பட்ட ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. கூடுதல் கட்டணம் வசூல், தகுதிச் சான்றின்மை, பெர்மிட் இல்லாதது உள்பட பல்வேறு குறைபாடுகள் இருந்தன.

முதலில் நோட்டீஸ் - பின்னர் பெர்மிட் ரத்து
சிறை பிடிக்கப்பட்ட 22 ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் விளக்க நோட்டீசிற்கு முறையாக விளக்கம் தராத ஆம்னி பஸ்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதல் முறையாக
இதுவரையில் பண்டிகை காலங்களில் அதிக கட்டணம் வசூலித்ததாக ஒரு ஆம்னி பஸ் கூட பறிமுதல் செய்யப்பட்டதில்லை. ஆனால் தற்போது முதல் முறையாக 22 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பயணிகளின் கவனத்திற்கு
மேலும் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து துறை சார்பில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் 10 இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த நம்பருக்குப் போன் செய்யுங்கள்
கூடுதல் கட்டணம் வசூல் செய்வது குறித்து பொதுமக்கள் 044-24794709, 26744445, 24749001 ஆகிய தொலைபேசி எண்களில் தகவல் தெரிவிக்கலாம் என்றும், அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

ஏன் திடீர் நடவடிக்கை
இதுவரை இல்லாத அளவுக்கு ஆம்னி பஸ்களின் மீது இந்த வருடம் திடீரென அதிரடி நடவடிக்கை பாய்ந்துள்ளது பலரையும் பல கேள்விகளைக் கேட்க வைத்துள்ளது.

ஜெ.வுக்காக சரியாக போராட காரணத்தாலா?
சமீபத்தில் ஜெயலலிதா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டபோது ஒவ்வொரு துறையாக தினசரி ஒரு ஸ்டிரைக், போராட்டம், வேலைநிறுத்தம் என நடத்தி வந்தனர். ஆனால் ஆம்னி பஸ்கள் மட்டும் சரிவர இதை நடத்தவில்லை. அதாவது பகல் நேரப் போராட்டத்தை மட்டுமே நடத்தினர். பகலில் விரல் விட்டும் எண்ணும் அளவுக்குத்தான் ஆம்னி பஸ்கள் ஓடும். ராத்திரியில்தான் அவர்களுக்கு பிசினஸே. எனவே கடனுக்காக போராட்டம் நடத்தியதால் போக்குவரத்துத்துறை அவர்கள் மீது பாய்ந்திருப்பதாக பேசிக் கொள்கிறார்கள்.!
எப்படியோ மக்களின் பர்ஸ் கிழியாமல் காத்தால் சரிதான்!












Click it and Unblock the Notifications