ஆட்சி போய்ட்டா நாய் கூட நம்மள சீண்டாது... அதிமுக அமைச்சர் சர்ச்சை பேச்சு
சிவகங்கை: ஆட்சி போய்விட்டால் நாய் கூட நம்மள மதிக்காது என சிவகங்கையில் அதிமுக அமைச்சர் பாஸ்கரன் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கையில் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று முன் தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காதி மற்றும் கிராமத் தொழில்கள் வாரிய அமைச்சர் பாஸ்கரன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசுகையில் சென்னையில் வரும் 30-ஆம் தேதி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. பூத் கமிட்டி அமைப்பது மற்றும் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்துதல் ஆகியவற்றை சரிபார்த்தல் ஆகியவற்றில் கட்சியினர் ஈடுபட வேண்டும்.
கூட்டம் கூட்டலாம்
அதுபோல் நாளை நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்திலும் கட்சியினர் கலந்து கொள்ள வேண்டும். கட்சியில் தொண்டர்கள் ஆர்வம் இல்லாமல் சோர்வுடன் இருக்கிறார்கள். யார் வேண்டுமானாலும் கூட்டம் போடலாம்.
நாய் கூட சீண்டாது
முயல், ஆமை கதை போல் ஆகி விடக் கூடாது. மைக்கில் பொதுப்படையாக சொல்ல முடியாது. அதிகாரிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த சந்தர்ப்பத்தை கோட்டைவிட்டால் ஆட்சி பறிபோய் நாய் கூட நம்மளை சீண்டாத நிலை ஏற்பட்டு விடும்.
பதவிகள் நிரந்தரம்
கட்சியில் உள்ள தொய்வு தற்போதுதான் சரி செய்யப்பட்டு வருகிறது. முதல்வர் பேச்சை இப்போதுதான் அமைச்சர்கள் கேட்டு வருகின்றனர். கட்சி பதவிகளை நிரந்தரமாக கேட்கவில்லை.
சிசேரியன்தான்
கட்சி வளர்ச்சிக்காகவும், மக்களுக்காகவும் பதவிகளில் இருக்கிறோம். பதவியிலேயே நிரந்தரமாக இருக்க வேண்டும் என நினைக்கவில்லை என்றார் பாஸ்கரன். மருத்துவர்கள் பேச்சை கர்ப்பிணிகள் கேட்டால் சிசேரியன்தான் என பாஸ்கரன் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.