திடீர், திடீருன்னு வளைக்கிறாங்களாம்.. பணத்த கறக்குறாங்களாம்
சென்னை: நேற்று காலை முதல் மாலை வரை பழம் பெரும் இசையமைப்பாளர் பெயரை கொண்ட முக்கிய புள்ளி ஒருவரின் உதவியாளர்கள் இருவரின் வீடுகளில் திடீர் ரெய்டு நடந்துள்ளதாம்.
முன்னாள் உளவுத்துறை சீனியர் தலைமையிலான குழுதான், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில், உதவியாளர்களின் பண குவியல்களை தேடி வலை விரித்ததாம்.
அதில் இரு உதவியாளர்களை தோட்ட வீட்டு டீம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாம். ஆரம்பத்தில், தங்களுக்கு எதுவும் தெரியாது. எல்லாம் அவருக்குத்தான் தெரியும். அவர் சொல்லும் வேலையை மட்டும் செய்து வந்தோம் எனச் சொல்லியுள்ளனர் உதவியாளர்கள்.
ஆனால் கார்டன் டீமின் அதிரடி விசாரணையைத் தொடர்ந்து உண்மைகளை கக்க தொடங்கியுள்ளனர் உதவியாளர்கள்.
'போதை பார்' லைசென்சுகள் தருவதில் பணம் அறுவடை செய்தது எப்படி?, புதிய வேலைகளுக்கு ஆட்கள் நியமித்ததில் வசூலான தொகை, 'பவர்ஃபுல்' துறையில் வசூலான தொகை, புதிய திட்டங்களில் கிடைத்த கமிஷன், தனியார் பவர்ஃபுல் நிறுவனங்கள் கொடுத்த தொகைகள், வெளிநாட்டு முதலீடு, வரவு, செலவுகள் என அனைத்தையும் ஒப்புவித்தார்களாம் உதவியாளர்கள்.
இதையடுத்து, நேற்று ஒருநாளில் மட்டும் இந்த இரண்டு உதவியாளர்களிடம் இருந்து பணமாக மட்டும் 300 கோடி ரூபாயும், 900 கோடிக்கும் மேல் சொத்து ஆவணங்கள், பங்கு முதலீடுகள், வாங்கிக் குவித்த நிலங்கள் என அனைத்தையும் தோட்ட வீட்டு டீம் பறிமுதல் செய்துள்ளது என கிசுகிசுக்கிறார்கள்.
ஐந்தாண்டுகளில் சுருட்டிய பணத்தை, இரண்டே நாளில் தோட்ட வீட்டு டீம் வளைத்துக் கொண்டு போகும் என அவர்கள் நினைக்கவில்லை. முன்னாள் உளவுத்துறை சீனியரின் விசாரணை வளையம் இன்னும் சிலர் பக்கம் நீண்டுள்ளதாம். எனவே அசராமல், அடித்து வசூலித்தவர்கள், இப்போது அச்சத்தில் உள்ளனராம்.