அதெல்லாம் ஒன்றும் ஆகாது.. தைரியமாக இருங்கள்..ரெட் அலர்ட் குறித்து வெதர்மேன்
Recommended Video
சென்னை: தமிழகத்துக்கு விடுக்கப்பட்டுள்ள ரெட் அலர்ட் எச்சரிக்கையால் ஒன்றும் ஆகாது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை வரை வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.
இந்நிலையில் திருவாரூர், புதுக்கோட்டை, நாகை, நாகூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்ட சுழற்சி தாழ்வு மண்டலமாக மாறி புயலாக மாறும்.
எனவே அக்டோபர் 7-ஆம் தேதி தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில் தமிழகத்துக்கு ரெட் அலர்ட் என்ற ஒற்றை வார்த்தையால் எங்கு பார்த்தாலும் தவறான வதந்திகள் பரவி வருகின்றன.பாமர மக்களுக்கு ரெட் அலர்ட் என்றால் என்ன என தெரியுமா. ஒரு நாள் நிம்மதியா வேலை செய்ய முடியலை.
இந்த போஸ்ட்டில் இணைத்துள்ள படத்தை பார்த்தால் புரிந்துவிடும். எனவே 7-ஆம் தேதி குறித்த கவலையை விடுங்கள். ஒன்றும் ஆகாது. கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்பதை நீங்களாகவே 7-ஆம் தேதிக்கு பிறகு புரிந்து கொள்வீர்கள் என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்துக்கு ரெட் அலர்ட் என்றவுடன் சென்னை 2015 வெள்ளமும் கேரள வெள்ளமும்தான் மக்கள் கண் முன் வந்து செல்கின்றன. இந்நிலையில் ரெட் அலர்ட்டால் பயப்பட தேவையில்லை என்று வெதர்மேன் கூறியுள்ளது நிம்மதியை தருகிறது.