வெப்பச் சலனத்தால் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம் தகவல்
சென்னை : தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு ஆங்காங்கே பரவலாக கனமழை பெய்யும் என்றும், மற்ற மாவட்டங்களிலும் ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்பு 40 டிகிரி வரை கொளுத்திய வெயில் தற்போது சற்று தணிந்துள்ளது. தமிழகத்தில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக திருச்சியில் 38.2 டிகிரி வெயில் பதிவானது. நாகப்பட்டினம், பாளையங்கோட்டையில் 38 டிகிரி, மதுரை 37.4 டிகிரி, கரூரில் 37 டிகிரி, சென்னையில் 35.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.

இந்நிலையில் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்கிறது. குறிப்பாக தேனி மாவட்டத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் 10 செ.மீ., கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை 8 செ.மீ., தேனி மாவட்டம் போடி நாயக்கனூர், பெரியகுளத்தில் 7 செ.மீ., கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் 6 செ.மீ. மழை பெய்துள்ளது.
இதனிடையே, அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஆங்காங்கே பரவலாக கனமழை பெய்யும் என்றும், மற்ற மாவட்டங்களிலும் ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை, இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் மழை பெய்யலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications