சவால்கள், சோதனைகளை புறங்காணச் செய்து வெற்றி பெறுவோம்... வேல்முருகன் பொங்கல் வாழ்த்து!
தமிழர் திருநாளாம் தை முதல் நாளை முன்னிட்டு உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களுக்கு தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
பண்ருட்டி: தைப்பொங்கலை முன்னிட்டு உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
வேல்முருகன் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில் : பிரச்சனைகள், பேரிடர்கள், வஞ்சகங்கள், சூழ்ச்சிகள், வீழ்ச்சிகள், தோல்விகள், வேதனைகள் என தமிழகத்தின் வாழ்வுரிமைக்கே என்றைக்கும் இல்லாத அளவுக்கு சவால்களும் சோதனைகளும் அதிகரித்திருக்கின்ற ஒரு சர்வாதிகார, பாசிச அரசியல் சூழலில்தான் இந்த ஆண்டின் தமிழர் திருநாளாம் தை முதல் நாள், தமிழ்ப் புத்தாண்டு நாள் பிறக்கிறது;
அன்றைய நாளே "தமிழ்நாடு" என்னும் இயற்பெயரை நம் தமிழ்நிலம் மீட்டுக்கொண்ட ஐம்பதாவது ஆண்டின் நாளும் பிறக்கிறது. வரலாற்று நிகழ்வாய் இவ்விரு நாட்களும் ஒன்றிணையும் இனிய இந்நன்னாளில் நாம் எதிர்கொள்ளும் சவால்கள், சோதனைகளைப் புறங்காணச் செய்து வெற்றி பெற உலகெங்கும் உள்ள தமிழ்மக்களுக்கு அன்பின் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்று கூறப்பட்டுள்ளது.