வைகோ திமுகவுடன் சேரக் கூடாது... காங்கிரஸிலிருந்து வாசன் விலக வேண்டும்! - தமிழருவி மணியன்
ஈரோடு: திமுகவுடன் வைகோ தேர்தல் கூட்டணி வைத்துக் கொள்ளக் கூடாது. ஜிகே வாசன் காங்கிரஸிலிருந்து விலகி வர வேண்டும் என்று தமிழருவி மணியன் கூறினார்.

காந்திய மக்கள் இயக்க நிறுவனர் தமிழருவி மணியன் ஈரோட்டில் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டபோது அளித்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. தமிழ் இனத்தின் நலனுக்காக, ஈழத் தமிழர்கள் அரசியல் தீர்வு காண்பதற்காக மோடியின் அரசு உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் எந்த செயலையும் செய்யவில்லை.
தற்போது 5 தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதற்கு மத்திய அரசின் மெத்தனப் போக்கே காரணம். எனவே நடைமுறையில் இல்லாத தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழக கட்சிகள் வெளியேற வேண்டும்.
சுப்பிரமணிய சாமிக்கு எதிராக போராடணும்
ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கூறிய சுப்பிரமணிய சுவாமிக்கு எதிராக தமிழக பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்தினால் இந்த மண்ணை பற்றி சிந்திக்கக் கூடியவர்கள் என ஏற்றுக்கொள்ளலாம்.
வைகோவுக்கு திமுக வேண்டாம்
தமிழ் இனத்துக்காக தொடர்ந்து போராடும் போர்க்குணம் மிக்க போராளி வைகோ. பொது வாழ்வில் நேர்மையான அவர் தி.மு.க.வுடன் கைகோர்க்கக் கூடாது. அவரிடம் பேசியதில் வைகோவுக்கு அந்த எண்ணம் இருப்பதாகவும் எனக்கு தெரியவில்லை. வைகோ தி.மு.க.வுடன் சேர மாட்டார் என நம்புகிறேன்.
அன்புமணி ராமதாசை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க எண்ணும் டாக்டர் ராமதாஸ் தி.மு.க. கூட்டணியில் இடம் பெறுவாரா? என தெரியவில்லை.
வாசன் வெளியே வரணும்
ஜி.கே.வாசன் என் நெருங்கிய நண்பர். நேர்மையானவர். கடந்த 5 ஆண்டுகள் கப்பல் போக்குவரத்து துறையில் கேபினட் மந்திரியாக இருந்தபோது எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகவில்லை. காங்கிரசில் இருந்து ஜி.கே.வாசன் வெளியேற வேண்டும்.
அவர் வெளியேறிவிட்டால் தமிழகத்தில் காங்கிரசின் கதை முடிந்து விடும். வாசன் வெளியேறினால் அவரை நான் ஆதரிப்பேன்.
-இவ்வாறு தமிழருவி மணியன் கூறினார்.












Click it and Unblock the Notifications