பசுமை வழிச்சாலை திட்டம் எதிர்ப்பு: தஞ்சை கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்
தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Recommended Video
தஞ்சை: பசுமை வழிச்சாலை திட்டத்தை கைவிடக்கோரி தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம்-சென்னை 8 வழி பசுமை விரைவுச் சாலை ரூ.10 ஆயிரம் கோடியில் அமைக்கப்படுகிறது. சேலம், தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 277 கிலோ மீட்டரில் அமையும் இந்த சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
5 மாவட்டங்களிலும் விளைநிலங்கள், பசுமை காடுகள், மலைகள், நீர் நிலைகளை என இயற்கை வளங்களை அழித்து பசுமை வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாயிகள், பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 5 மாவட்டத்திலும் எதிர்ப்பு தெரிவிப்பதால் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த திட்டத்தினை எதிர்த்து விவசாயிகள், கிராம மக்கள் மட்டுமே இறங்கி போராட்டம் நடத்தி வந்த நிலையில், கல்லூரி மாணவர்கள் களம் இறங்கியுள்ளனர். தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவர்கள் இன்று போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
பசுமை வழிச்சாலை திட்டத்தை கைவிடக் கோரியும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் முழக்கங்களை அவர்கள் எழுப்பி வருகின்றனர். தமிழ்நாடு மாணவர் சங்கத்தின் சார்பாக சுமார் 200-க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.