தமிழ்ப்புத்தாண்டு ஸ்பெஷல்... ஒரே நாளில் ரூ 100 கோடிக்கு ‘சரக்கு’ விற்று டாஸ்மாக் சாதனை
சென்னை: தமிழ்நாட்டில் தமிழ்ப்புத்தாண்டு அன்று ஒரேநாளில் மட்டும் ரூ.100 கோடிக்கு மதுவிற்பனையாகி சாதனை புரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. லோக்சபா தேர்தலையொட்டி வரும் 22-ந்தேதி முதல் 3 நாட்களுக்கு டாஸ்மார்க் கடைகள் மற்றும் ஓட்டல் பார்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேர்தலையொட்டி 10 சதவீதம் மது விற்பனை அதிகரித்துள்ளதாகவும், தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் மட்டும் ரூ 100 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
மொத்தக் கடைகள்....
தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 6 ஆயிரத்து 800 டாஸ்மாக் மதுபானக்கடைகள் உள்ளன. இங்கு சாதாரண நாட்களில் ரூ.57 கோடி முதல் ரூ.60 கோடி வரை மது விற்பனையும், அதுவே சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரூ.70 கோடி முதல் ரூ.90 கோடி வரை விற்பனையாகியும் ஆகி வருகின்றன.
பண்டிகை நாட்கள்...
தீபாவளி, புத்தாண்டு, பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு போன்ற பண்டிகைகளின் போது டாஸ்மாக் கடைகளில் விற்பனை கொஞ்சம் ஸ்பெஷலாகவே இருக்கும். அந்த வகையில், கடந்த 13-ந்தேதி மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்த நிலையிலும், மறுநாளான 14-ந்தேதி தமிழ்ப்புத்தாண்டு அன்று ரூ.100 கோடிக்கு மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது.
பிராந்தி, விஸ்கி, ரம்....
இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான வகைகளான பிராந்தி, விஸ்கி, ரம் போன்றவை 2 லட்சத்து 14 ஆயிரம் பெட்டிகளும், பீர்பாட்டில்கள் 1 லட்சத்து 27 ஆயிரம் பெட்டிகளும் விற்பனையாகியுள்ளன.
ரூ 970ம் கோடிக்கு விற்பனை...
இதன் மூலம் இம்மாதம் தொடக்கத்திலிருந்து கடந்த 14-ந்தேதி வரை ரூ.970 கோடிக்கு, இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான வகைகள் மற்றும் பீர்பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
விற்பனை இன்னும் அதிகரிக்கும்...
தேர்தல் நெருங்கிக்கொண்டு இருப்பதால், மதுவிற்பனையும் வழக்கத்தை விட 10 சதவீதம் கூடுதலாக விற்பனை ஆவதாக தெரிகிறது. அதிலும் மூன்று நாட்கள் மது விற்பனைக்கு தடை உள்ளதால் வரும் இரண்டு நாட்களில் விற்பனை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
பதுக்கலைத் தடுக்க...
மது விற்பனைத் தடை நாட்களில் பதுக்கி வைத்து மதுவிற்பனை செய்வதை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.