ரூ.100 பெரிதா... ரூ 1,000 பெரிதா? டாஸ்மாக் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட குடிமகன்
டாஸ்மாக் குடிமகன் போதையில் ரூ.1,000 நோட்டை கிழித்து வீசிய சம்பவம் கோபியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோபி: டாஸ்மாக்கில் 1,000 ரூபாய் நோட்டுக்கு சரக்கு கொடுக்காததால் ஆத்திரமடைந்த குடிமகன் டாஸ்மாக் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின்னர் தான் வைத்திருந்த ரூ.1,000 நோட்டை கிழித்து வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தார். மோடியின் அறிவிப்பு சாதாரண மக்களை எந்த அளவுக்கு பாதித்துள்ளது என்பதை நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம். பணம் கையில் இருந்தும் அத்யாவசிய பொருட்கள் வாங்கக் கூட மக்கள் வழியில்லாமல் திண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் டாஸ்மாக்கில் 1,000 ரூபாய் நோட்டுக்கு சரக்கு கொடுக்காததால் ஆத்திரமடைந்த குடிமகன் தான் வைத்திருந்த ரூ.1,000 நோட்டை கிழித்து வீசிய சம்பவம் கோபிசெட்டிபாளையத்தில் நடந்துள்ளது. நேற்று முன்தினம் கோபியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வந்த குடிமகன் ஒருவர், 1,000 ரூபாய் நோட்டை கொடுத்து சரக்கு கேட்டார்.
அதற்கு டாஸ்மாக் கடையில் இருந்த ஊழியர் 1,000 ரூபாய் நோட்டை செல்லாது என வாங்க மறுத்து சரக்கு இல்லை எனக் கூறியுள்ளார். சிறிது நேரத்தில் அங்கு வந்த மற்றொருவர் 100 ரூபாய் நோட்டு கொடுத்து சரக்கு வாங்கிச் சென்றார். இதைப் பார்த்த 1,000 ரூபாய் கொண்டு வந்த குடிமகன் அந்த கடை ஊழியரைப் பார்த்து ரூ.100 பெரிதா? ரூ.1,000 பெரிதா? அவருக்கு மட்டும் ஏன் சரக்கு கொடுக்கிறீர்கள்? எனக்கு தரக் கூடாதா? என கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் தான் வைத்திருந்த ரூ.1,000 நோட்டை கிழித்து வீசினார். சிறிது நேரத்தில் போதை தெளிந்தவுடன் ரூ.1,000 நோட்டை கிழித்து விட்டோமே என கதறி அழுதார். நல்ல நோட்டை மாற்றுவதற்கே மக்கள் சிரமப்பட்டு வரும் வேளையில் பழைய 1,000 ரூபாய் நோட்டை குடிமகன் ஒருவர் கிழித்து வீசியது கோபியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.