குவார்ட்டர் விலை இன்றுமுதல் 88 ரூபாய் – டாஸ்மாக்கில் மதுபானங்கள் விலை உயர்வு!
சென்னை: தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் மதுபானங்கள் விலையானது உயர்கின்றது என்ற அறிவிப்பினை அரசு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
பிராந்தி, விஸ்கி, ரம் போன்ற இந்தியாவில் தயாராகும் வெளிநாட்டு மதுபான வகைகளுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது.

கடந்த வருடம் உயர்வு:
கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி இந்த மதுபான ரகங்களின் விலை உயர்த்தப்பட்டது. மதுவுக்கான ஆயத்தீர்வை உயர்த்தப்பட்டதால் இந்த நடவடிக்கையை அரசு அப்போது மேற்கொண்டது.

உற்பத்தியாளர்கள் கோரிக்கை:
மதுபான உற்பத்தியாளர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளாக கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை. தற்போது மது உற்பத்தியில் கூடுதல் செலவு ஏற்படுவதால், கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கும்படி மதுபான உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மதுவிலை மீண்டும் உயர்வு:
அதை அரசு ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி இருக்கிறது. இதைத்தொடர்ந்து டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விற்பனை விலையையும் அரசு உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.

இன்று முதல் அமல்:
இந்த விலை உயர்வு இன்று காலை 10 மணியில் இருந்து அமலுக்கு வருகிறது.

குவார்ட்டர் விலை:
சாதாரண ரக மதுவின் 180 மி.லி பாட்டில் விலை தற்போது ரூபாய் 80 க்கு விற்கப்படுகிறது. அதன் விலை ரூபாய் 8 உயர்ந்து இன்று முதல் ரூபாய் 88 க்கு விற்பனை செய்யப்படும்.

ஆப் பாட்டில் விலை:
தற்போது 160 ரூபாய்க்கு விற்கப்படும் சாதாரண மது அரை பாட்டில் விலை ரூபாய் 16 அதிகரிக்கப்பட்டு ரூபாய் 176 க்கு விற்கப்படும்.

புல் பாட்டில் விலை:
சாதாரண ரக முழு பாட்டில் விலை 32 ரூபாய் கூட்டப்பட்டு உள்ளது. எனவே தற்போது ரூபாய் 320 என்று விற்கப்படும் முழு பாட்டில் இனி ரூபாய் 352 என்று விற்பனை செய்யப்படும்.

அரசிற்கு கூடுதல் வருவாய்:
இந்த மது விலை உயர்வினால் தமிழக அரசுக்கு ரூபாய் 1,000 கோடி முதல் ரூபாய் 1,800 கோடி வரை கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மது விலையின் புதிய பட்டியல், அனைவரும் பார்க்கும் வகையில் டாஸ்மாக் கடைகளுக்கு வெளியே ஒட்டப்படும்.

10 பேர் கொண்ட குழு:
சரியான விலையில் மது பாட்டில்கள் விற்கப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்கு தற்போது மாவட்டம் தோறும் 10 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள், டாஸ்மாக் கடைகளின் விற்பனை நடவடிக்கைகளை சோதனையிடும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications