அப்படிப் போடு சபாசு.. சரிஞ்சு போச்சு சியர்ஸு... 500 கடைகளை அரசு மூடியதால் மது விற்பனையில் 5% சரிவு!
சென்னை: தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதன் எதிரொலியாக டாஸ்மாக் விற்பனை 5 சதவீதம் குறைந்துள்ளது. நாள் ஒன்றுக்கு ரூ.3.28 கோடி மதுவிற்பனையில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 6,800 டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்கி வந்தன. மது விற்பனை மூலம் அரசுக்கு தினமும் ரூ.60 கோடி வருவாய் கிடைத்து வந்தது. இந்நிலையில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாலும், டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டதாலும் மதுவிற்பனை குறைந்துள்ளது.

தேர்தல் வாக்குறுதி
சட்டசபை தேர்தல் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என அதிமுக அறிவித்திருந்திருந்தது. அதன்படி முதல்வர் ஜெயலலிதா ஆட்சிப்பொறுப்பேற்ற நாளில், 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் ஒன்று மதுக்கடைகளின் விற்பனை நேரத்தை 2 மணி நேரம் குறைப்பது மற்றும் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவது என்பதாகும்.

500 மதுக்கடைகள் மூடல்
அதன்படி டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டன. முன்னதாக காலை 10 மணி முதல் இரவு 10 மணி மதுக்கடைகள் செயல்பட்டு வந்தன. அதில் மாற்றம் கொண்டு வரப்பட்டதனால், மே 24-ந் தேதி முதல், டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரம் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் என மாற்றப்பட்டது. இதன்மூலம் டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரம் 2 மணி நேரம் குறைக்கப்பட்டது.

மண்டலங்கள்
இதேபோல, ஜுன் 19-ந் தேதி 500 மதுக்கடைகள் மூடப்பட்டன. சென்னை மண்டலத்தில் 58 மதுக்கடைகளும், கோவை மண்டலத்தில் 60 மதுக்கடைகளும், மதுரை மண்டலத்தில் 201 மதுக்கடைகளும், திருச்சி மண்டலத்தில் 133 மதுக்கடைகளும், சேலம் மண்டலத்தில் 48 டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டன.

மதுவிற்பனை குறைந்தது
டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டதாலும், 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாலும் மதுவிற்பனை குறையத் தொடங்கியது. இதனால் தொடக்கத்தில் 10 முதல் 12 சதவீதம் வரை மதுவிற்பனை குறைந்தது. இதனிடையே மதுவிற்பனை சற்று அதிகரிக்கத் தொடங்கியது.

5 சதவீதம் குறைவு
தற்போது மதுவிற்பனை 5 சதவீதம் குறைவு என்ற அளவில் உள்ளது. அதன்படி, நாள் ஒன்றுக்கு ரூ.60 கோடி என்ற அளவில் இருந்த மதுவிற்பனை, தற்போது ரூ.57.72 கோடி என குறைந்துள்ளது.அதாவது ரூ.3.28 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மண்டல அளவில்
மண்டல அளவில் பார்த்தால், சென்னை மண்டலத்தில் ரூ.65 லட்சமும், கோவை மண்டலத்தில் ரூ.60 லட்சமும், சேலம் மண்டலத்தில் ரூ.38 லட்சமும், திருச்சி மண்டலத்தில் ரூ.67 லட்சமும், மதுரை மண்டலத்தில் ரூ.98 லட்சமும் என மொத்தம் ரூ.3.28 கோடி அளவுக்கு மது விற்பனை குறைந்துள்ளது.

2000 ஊழியர்கள் வேலை இழப்பு
தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டதால், சுமார் 2000 ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர். இவர்களுக்கு மண்டலம் வாரியாக முதுநிலை பட்டியல் தயாரிக்கப்பட்டு, டாஸ்மாக் கடைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.

ஊழியர் கோரிக்கை
ஆனால் முதுநிலைப் பட்டியல் அடிப்படையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. தமிழக அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications