திருச்சியில் டாஸ்மாக் கடை சூறையாடல்: 6 நாம் தமிழர் கட்சியினர் கைது
திருச்சி: திருச்சியில் டாஸ்மாக் கடையை நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் அடித்து நொறுக்கி சூறையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டாஸ்மாக் கடையை சேதப்படுத்திய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
மறைந்த தலைவர் காமராஜரின் பிறந்த நாளையொட்டி, திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் இன்று இனிப்பு வழங்கிக்கொண்டிருந்தனர். அப்போது அருகில் இருந்த அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுபானக் கடைக்குள் திடீரென நுழைந்த தொண்டர்கள், அங்கிருந்த பணியாளர்களை விரட்டிவிட்டுவிட்டு, தங்கள் கைகளில் பிடித்திருந்த கொடிக் கம்புகளால், ஷோகேசில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபான பாட்டில்களை அடித்து நொறுக்கினர்.
அதோடு டாஸ்மாக் கடைக்கு எதிராக முழக்கமிட்டமாறே, மதுபாட்டில்கள் அடுக்கப்பட்டிருந்த பெட்டிகளை கடைக்கு வெளியே தூக்கி போட்டு உடைத்து சேதப்படுத்தினர். இந்த சம்பவத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பல்லாயிரக்கணக்கான மதுபாட்டிகள் உடைந்து வீணானது.
டாஸ்மாக் கடையை அடித்து உடைத்த கையோடு மதுபான கடையை மூடக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு விரைந்து வந்த போலீஸார், இந்த சம்பவத்திற்கு காரணமான நாம் தமிழர் கட்சியின் திருச்சி மாவட்ட துணை செயலாளர் பிரேம் ஆனந்த், முனியப்பன், கோபி, சரவணன், விஜய், சிவா உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.