சென்னை தி.நகரில் டாஸ்மாக் கடைக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு- ஒருவர் படுகாயம்!
சென்னை: சென்னை தியாகராயர் நகரில் டாஸ்மாக் மதுபானக் கடைக்கு இன்று மாலை மர்ம நபர்கள் தீ வைத்துவிட்டு தப்பி ஓடினர். இதில் டாஸ்மாக் ஊழியர் பழனி என்பவர் படுகாயமடைந்தார்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி பல கட்டப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் மதுக்கடைகள் சூறையாடப்பட்டு தீ வைக்கப்பட்டும் வருகின்றன.
சேலத்தில் மதுக்கடை ஒன்றின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதில் ஊழியர் ஒருவர் பலியான சம்பவமும் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் சென்னையின் மையப்பகுதியான மக்கள் அதிகமாக கூடும் தியாகராயர் நகர் தெற்கு போக் சாலையில் மதுக் கடை ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 4 மணியளவில் மதுபானக் கடைக்கு வந்த மர்ம நபர் ஒருவர் பெட்ரோலை ஊற்றி தீ பற்ற வைத்துவிட்டு தப்பி ஓடியிருக்கிறார். இதில் டாஸ்மாக் கடை ஊழியர் பழனி என்பவர் படுகாயமடைந்தார்.
இதுபற்றிய தகவல் அறிந்தததும் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை விரைந்து அணைத்தனர். மதுவிலக்கை வலியுறுத்தும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தீ வைத்தார்களா? அல்லது பணியாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையேயான தகராறில் தீ வைக்கப்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.