சேலத்தில் டாஸ்மாக் ஊழியர் அடித்துக் கொலை: விற்பனை பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள்
சேலம்: சேலத்தில் டாஸ்மாக் கடை ஊழியரை அடித்துக் கொன்று விற்பனை பணத்தை கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் அரியனூரை அடுத்து உள்ள சின்ன சீரகாபாடியில் இருக்கும் மேலத் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் குமார்(37). மல்லூரில் இருக்கும் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். அவரது மனைவி பூங்கொடி. அவர்களுக்கு சசிரேகா என்ற மகளும், ராஜேஷ் கண்ணா என்ற மகனும் உள்ளனர்.
குமார் கடந்த சனிக்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை கே.பி. வலசு அருகே சென்றபோது அவருக்கு பின்னால் வந்த பைக்கில் இருந்தவர்கள் அவரை வழிமறித்து தாக்கினர்.
இதில் படுகாயம் அடைந்த குமார் மயங்கி விழுந்துவிட்டார். இதையடுத்து அந்த நபர்கள் குமார் வைத்திருந்த டாஸ்மாக் வசூல் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பியோடிவிட்டார்கள்.
தெருவில் மயங்கிக் கிடந்த குமாரை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு குமார் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
குமார் தினமும் இரவு கடையை பூட்டிவிட்டு விற்பனை பணத்துடன் வருவதை அறிந்த யாரோ தான் இதை செய்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications