”சரக்கு” இல்லை என்று கூறிய டாஸ்மாக் ஊழியர்கள் – கடைக்குள்ளேயே பூட்டி வைத்த குடிகாரர்கள்

குமரி மாவட்டம் நித்திரவிளையில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு வின்சென்ட் தாஸ், அனில் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இரவு 10 மணிக்கு கடையின் ஷட்டரை பாதியளவு இறக்கி விட்டு ஊழியர்கள் கடையின் உள்ளே இருந்து கணக்கை சரிபார்த்து கொண்டிருந்தனர்.
அப்போது பைக்கில் வந்த இரு வாலிபர்கள் மதுபானம் கேட்டனர். அதற்கு கடை ஊழியர்கள் 10 மணி ஆகி விட்டது. இனி மதுபானம் தர முடியாது என தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் கடையின் ஷட்டரை முழுமையாக இறக்கி கீழே இருந்த பூட்டை எடுத்து போட்டு விட்டு சென்றனர். இதை சற்றும் எதிர்பாராத ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து ஷட்டரை திறந்து விடுங்கள் என சத்தம் போட்டனர்.
அந்த வழியாக வந்த ஒருவர் டாஸ்மாக் கடையில் இருந்து சத்தம் வருவதை பார்த்து அருகில் சென்று விசாரித்துள்ளார். ஊழியர்கள் நடந்த சம்பவத்தை தெரிவித்தனர். பின்னர் அவர் ஷட்டரை திறந்தார்.
இதை தொடர்ந்து ஊழியர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் டாஸ்மாக் கடையில் பணிபுரியும் ஊழியர்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications