டிசிஎஸ் பெண் என்ஜீனியர் கொலையில் 4 வட மாநில கட்டுமானத் தொழிலாளர்கள் கைது

சென்னை:சென்னை ஐ.டி பெண் ஊழியர் கொலை வழக்கில் இன்று 4 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். நான்கு பேருமே மேற்கு வங்கம் மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்கள் ஆவர்.
இந்த நான்கு பேரும் கொல்லப்பட்ட உமா மகேஸ்வரியின் செல்போனை பயன்படுத்தியபோது சிக்கியுள்ளனர்.
சிறுசேரி சிப்காட் வளாகத்தில் டி.சி.எஸ். நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த என்ஜினீயர் உமா மகேஸ்வரி கொலை சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
சி.பி.சி.ஐ.டி ஐ.ஜி.மஞ்சுநாதா தலைமையிலான அதிகாரிகள் கடந்த 3 நாட்களாக சிறுசேரியில் முகாமிட்டு கொலை நடந்த இடத்தில் தடயங்களை சேகரித்தனர். உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில், புதர்களுக்கு நடுவில் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது சிகரெட் துண்டுகள் ,மதுபாட்டில்கள் மற்றும் தலை முடிகளும் சிதறிக் கிடந்தன. இவற்றை சேகரித்து தடயவியல் சோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.
உமா மகேஸ்வரி தனது அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு நடந்து செல்லும் ஒரே ஒரு வீடியோ காட்சியை தவிர வேறு எந்த ஆரம்ப கட்ட தடயங்களும் போலீசிடம் சிக்கவில்லை. இதனால் அவர் யாருடன் சென்றார்,அதன் பின்னர் நடந்தது என்ன என்பது எல்லாமே மர்மமாகவே இருந்து வந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நான்கு பேரைப் பிடித்துப் போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக இன்று செய்திகள் வெளியாகின. தற்போது அந்த நான்கு பேரும் கைது செய்ய்ப்பட்டுள்ளனர்.
இந்த நான்கு பேருமே வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆவர். இவர்கள் உமா மகேஸ்வரியின் செல்போனைப் பயன்படுத்தி வந்ததால் சிக்கியுள்ளனர். இவர்களில் ராம் மண்டல், உத்தம் மண்டல் ஆகியோர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள். மற்ற இருவரும் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். மேலும் ஒருவருக்கும் இதில் தொடர்புள்ளது. அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications