மோடி வேட்புமனுவை முன்மொழிந்த டீக்கடைக்காரர்.. டீக்கடைக்காரர்கள் வரவேற்பு
சென்னை: பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தபோது டீக்கடைக்காரர் ஒருவரை தனது மனுவை முன்மொழிய வைத்ததற்கு சென்னையில் உள்ள சில டீக்கடைக்காரர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
வதோதரா தொகுதியில் இன்று மோடி வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது ஒரு டீக்கடைக்காரர்தான் மோடியின் மனுவை முன்மொழிந்தார்.
மோடியை முன்பு சில காங்கிரஸ் தலைவர்கள் டீ விற்றவர்தானே என்று கிண்டலடித்தது முதல் டீயையும் ஒரு பிரசார ஆயுதமாக்கி விட்டது பாஜக. அந்த அடிப்படையில் இன்று மோடி வேட்பு மனுத்தாக்கல் செய்தபோது டீக்கடைக்காரரையே விட்டு மனுவை முன்மொழிய வைத்து விட்டனர்.
இதுகுறித்து சென்னயைச் சேர்ந்த சில டீக்கடைக்காரர்கள் கூறுகையில், குஜராத் கலவரத்தில் பலர் உயிர் இழப்பதற்கு மோடிதான் காரணம் என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. ஆனால் அதனை பொய்யாக்கும் வகையில் அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
விரல் நுனியில் அனைத்து விஷயங்களையும் கையில் வைத்திருக்கும் மோடி பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டிருப்பது வர வேற்கத்தக்கதுதான். மக்களும் மாற்றத்தை விரும்புகிறார்கள்.
டீக்கடைக்காரர் ஒருவரை தனது வேட்புமனுவை முன் மொழியச் செய்திருப்பதன் மூலம் நரேந்திர மோடி உழைப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பவர் என்பது உறுதியாகியுள்ளது. அவர் நாட்டுக்கு நல்லது செய்வார் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.
நரேந்திர மோடி டீக்கடைக் காரர்களை பெருமைப்படுத்தி இருப்பதன் மூலம் தான் கடந்து வந்த பாதையை மறக்காமல் இருப்பது தெளிவாகியுள்ளது. வந்த வழியை எல்லோருமே மறக்காமல் இருப்பது நல்லதுதான் என்றனர்.