சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து கல்வி அலுவலகத்தில் மகன், சகோதரியுடன் ஆசிரியை தர்ணா
நெல்லை: சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய கோரி ஆசிரியை குடும்பத்துடன் தொடக்க கல்வி அலுவலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
நெல்லை அருகே உள்ள முக்கூடலை சேர்ந்தவர் மரகதவல்லி. இவர் தனது மகன் மற்றும் சகோதரி கல்யாணி ஆகியோருடன் நெல்லை டவுனில் உள்ள மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்துக்கு மாலை வந்தார். அங்கு கல்வி அலுவுலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். மரகதவல்லிக்கு ஆதரவாக தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்க பொது செயலாளர் கிப்சன் மற்றும் ஆசிரியையின் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் நடத்திய மரகதவல்லி கூறியதாவது: நான் கடந்த 27 ஆண்டுகளாக முக்கூடல் தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறேன். எனக்கு பதவி உயர்வு வழங்க கோரி கல்வி அலுவலகத்தில் மனு செய்தேன். தகுதி இருந்தும் எனக்கு வழங்காமல் வேறு ஆசிரியருக்கு வழங்கப்பட்டதை அறிந்தேன். மேலும் கல்வி அதிகாரிகளிடம் பதவி உயர்வு கேட்டு மனு செய்தேன். என் மீது பள்ளி நிர்வாகம் தெரிவித்திருந்த குற்றச்சாட்டுகளுக்கு வாய்மொழியாக தன் தரப்பு வாதத்தை விசாரணையின் போது தெரிவித்தேன்.
ஆனாலும் பள்ளி நிர்வாகம் கடந்த அக் 29ம் தேதி முதல் 2 மாத காலம் என்னை தற்காலிக பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. எனக்கு நீதி கிடைக்கும் வரை குடும்பத்துடன் மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்துவேன். இதற்கிடையே இந்த தகவல் கிடைத்து அங்கு விரைந்து வந்த சந்திப்பு போலீசார் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் மாலை 6 மணி தாண்டியும் அவர் செல்லாமல் அங்கு போராட்டத்தில் தொடர்ந்து வந்தார்.