மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் வாய் பேச முடியாத இளம்பெண்ணை சீரழித்த தொழிற்கல்வி ஆசிரியர் கைது
கோவை: காரமடை அருகே மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் தங்கியிருந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தொழிற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்து உள்ள காரமடை அருகே இருக்கும் குட்டையூரில் நேயம் ஊனமுற்றோர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூளை வளர்ச்சி குன்றியவர்கள் படித்து வருகின்றனர். இது தவிர இது காப்பகமாகவும் உள்ளது. இந்த காப்பகத்தில் பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் வணங்காமுடி(57) என்பவர் இந்த பள்ளியின் தொழிற்கல்வி ஆசிரியராக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார். அவர் கடந்த 1 வாரத்திற்கு முன்பு அங்கு தங்கியிருந்த வாய் பேச முடியாத 20 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து அறிந்த நிர்வாகம் சம்பவத்தை மறைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
கோவையில் இருந்து சேவா சங்கம் மூலம் தான் இந்த பள்ளிக்கு மளிகை பொருட்கள் வழங்கப்படும்.
அவ்வாறு மளிகை பொருட்கள் கொண்டு வந்தவர்களிடம் அப்பெண் சைகையால் தனக்கு நேர்ந்த கொடுமையை தெரிவித்தார். உடனே அவர்கள் இது குறித்து கோவை மக்கள் நல சேவா சங்கத் தலைவர் குருமூர்த்தியிடம் தெரிவித்தனர். அவர் இந்த சம்பவம் பற்றி காரமடை போலீசில் புகார் கொடுத்தார்.
அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் வணங்காமுடியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications