தினகரனை நீக்குவதாக உடனே அறிவியுங்கள்... எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்கும் ஓபிஎஸ்
அதிமுகவில் இருந்து டிடிவி தினகரனை நீக்குவதாக உடனே அறிவிக்க வேண்டும் என எடப்பாடி கோஷ்டிக்கு ஓபிஎஸ் கோஷ்டி நெருக்கடி கொடுத்து வருகிறது.
சென்னை: தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டிடிவி தினகரனை அதிமுகவில் இருந்து நீக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நெருக்கடி கொடுத்து வருகிறாராம். ஆனால் பொதுச்செயலர் சசிகலாதானே அவரை நீக்க வேண்டும் என தயங்கி வருகிறாராம் எடப்பாடி பழனிச்சாமி.
அதிமுகவின் இரு கோஷ்டிகள் இணைப்பு பேச்சுவார்த்தை இன்று நாளை என நிச்சயமற்ற நிலையே நீடிக்கிறது. அதேநேரத்தில் ஓபிஎஸ் கோஷ்டி முன்வைக்கும் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறியும் வருகிறது.
பேனர்கள் அகற்றம்
சசிகலா, தினகரன் இல்லாத அதிமுக என்கிற நிலை தற்போது உருவாகிவிட்டது. தினகரன் டெல்லியில் கைது செய்யப்பட்ட நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் சசிகலாவின் பேனர்கள் அகற்றப்பட்டுவிட்டன. ஜெயலலிதாவின் பேனர்கள் மட்டுமே தற்போது அதிமுக தலைமை அலுவலகத்தில் இருக்கின்றன.
ஓபிஎஸ் தரப்பு நெருக்கடி
இந்த நிலையில் அமாவாசை நாளான இன்று இரு கோஷ்டிகளும் அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தையை நடத்தும் என கூறப்பட்டது. ஆனால் ஓபிஎஸ் தரப்போ, கைது செய்யப்பட்டுள்ள தினகரனை அதிமுகவில் இருந்து நீக்குவதாக அறிவிக்க வேண்டும் என எடப்பாடி தரப்புக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.
நீக்க தயக்கம்
இருப்பினும் பொதுச்செயலராக உள்ள சசிகலாதானே தினகரனை நீக்க முடியும்... நாங்க எப்படி அதை செய்ய முடியும் என கையை பிசைகிறதாம் எடப்பாடி தரப்பு. அதிமுகவின் அமைப்பு செயலர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி நீங்க நீக்கலாம் என அழுத்தம் கொடுக்கிறது ஓபிஎஸ் தரப்பு.
நீக்கமா? ராஜினாமாவா?
இதைஏற்று எந்த நிமிடத்திலும் தினகரனை அதிமுகவில் இருந்து நீக்கும் அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது. இதனிடையே தாமே அதிமுக துணைப் பொதுச்செயலர் பதவியை ராஜினாமா செய்தால் கவுரமாகவே இருக்கும் என தினகரன் கருதுகிறாராம். இன்றே தினகரன் நீக்கம் அல்லது ராஜினாமா செய்தி வெளியாகலாம் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.