சசிகலாவுடன் எடப்பாடி ஆதரவு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தொலைபேசியில் பேச்சு? தினகரன் மீது சரமாரி புகார்
சசிகலாவுடன் எடப்பாடி ஆதரவு அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் தொலைபேசியில் பேசியதாக கூறப்படுகிறது.
சென்னை: பரோலில் வெளியே வந்துள்ள சசிகலாவுடன் எடப்பாடி ஆதரவு அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் போனில் பேசியதாக கூறப்படுகிறது. தினகரனின் தன்னிச்சையான நடவடிக்கையே பிரச்சனைகளுக்கு காரணம் எனவும் அவர்கள் சசிகலாவுடன் புகார் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
உடல்நிலை பாதிக்கப்பட்ட கணவர் நடராஜனை பார்ப்பதற்காக 5 நாட்கள் பரோலில் வந்துள்ளார் சசிகலா. எந்த ஒரு அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன்தான் சசிகலாவுக்கு பரோல் கொடுக்கப்பட்டது.
சசியுடன் அமைச்சர்கள் பேச்சு
ஆனால் சசிகலா பெங்களூருவில் இருந்து சென்னை வரும் வரை அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். அத்துடன் சசிகலா சென்னை வந்து சேர்ந்த இரவு இளவரசியின் மருமகன் போனில் தொடர்பு கொண்டு எடப்பாடி ஆதரவு அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் சசிகலாவிடம் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.
சசிகலாவிடம் புகார்
கூவத்தூரில் எடப்பாடி அரசுக்கு உறுதுணையாக இருப்போம் என்று சத்தியம் வாங்கியதன் அடிப்படையில்தான் அரசுடன் இருப்பதாகவும் எப்போதுமே உங்களுக்குத்தான் நாங்கள் விசுவாசமாக இருப்போம் எனவும் அவர்கள் சசிகலாவிடம் கூறியுள்ளனர். அதேநேரத்தில் தினகரனின் நடவடிக்கைகள் தன்னிச்சையாகவும் அனைவரையும் ஓரம்கட்டுவதாக இருப்பதாகவும் புகார் கூறியுள்ளனர்.
தன்னிச்சையான தினகரன்
தினகரனின் செயல்பாடுகளால்தான் அவரை எதிர்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் சசிகலாவிடம் அமைச்சர்கள் சிலர் புகார் கூறியுள்ளனர். மேலும் தினகரன் தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டிருப்பதையும் சசிகலாவிடம் புகாராக கூறியுள்ளனர்.
சசியிடம் வருத்தம் தெரிவித்த அமைச்சர்கள்
இதைத் தொடர்ந்து எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏக்கள் நேற்றும் கூட சசிகலாவுடன் போனில் பேசியதாக கூறப்படுகிறது. சில அமைச்சர்கள் நேரில் வந்து சந்திக்காததற்கு மன்னிப்பும் கோரியதாகவும் கூறப்படுகிறது.