அங்கிட்டு ஓபிஎஸ் கோஷ்டி உண்ணாவிரதம்...இங்கிட்டு சசி அணி அன்னதானம்.. சேலத்தில் அலேக்!
சேலத்தில் ஜெயலலிதா மரணத்திற்கு நீதி கேட்டு ஓபிஎஸ் அணியைச் சேர்ந்தவர்கள் உண்ணாவிரதம் இருந்த இடத்திற்கு அருகில் அன்னதானம் போட ஏற்பாடு செய்யப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியது.
சேலம் : ஜெயலலிதா மரணத்திற்கு நீதி கேட்டு ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த செம்மலை தலைமையில் சேலத்தில் உண்ணாவிரதம் இருக்கின்றனர். அந்த இடத்திற்கு அருகிலேயே அன்னதானத்திற்கு சமைக்க அனுமதி அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஓபிஎஸ் அணியினரின் கோரிக்கை. இதனை வலியுறுத்தி
தமிழகத்தில் 36 இடங்களில் பன்னீர் செல்வம் அணியினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது.
சென்னையில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் பன்னீர் செல்வம் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது. பெண்கள் அதிகளவில் வந்திருந்து பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
சேலத்தில் மேட்டூர் எம்எல்ஏ செம்மலை தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது. முதல்வரின் சொந்த மாவட்டத்திலேயே ஏராளமானோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
உண்ணாவிரதப் பந்தல் அருகிலேயே சிலர் அடுப்பு மூட்டி சமையல் செய்தனர். இதற்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து கோவிலுக்கு சமைப்பதாக மர்ம நபர்கள் தெரிவித்தனர். எனினும் ஓபிஎஸ் அணியினர் எதிர்ப்பு தெரிவிக்கவே அன்னதானம் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டது. சசிகலா அணியினர் தங்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாக ஓபிஎஸ் அணியினர் தெரிவித்தனர்.
பிரியாணி போட்டோமே
திமுகவினர் கஞ்சித் தொட்டி திறந்த போதும், அவர்கள் உண்ணாவிரதம் இருந்த போது கடந்த காலங்களில் அதிமுகவினர் பிரியாணி சமைத்து போட்டனர். அதே போல ஆளுங்கட்சியை எதிர்த்து அதே கட்சியை சேர்ந்த உறுப்பினர்களும், தொண்டர்களுமே உண்ணாவிரதம் ஈடுபட்டுள்ளதால் எதிர் அணியினர் அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்து விட்டனர்.
ஈரோட்டிலும் அன்னதானம்
இதே போல ஈரோடு நகரில் அதிமுகவினர் உண்ணாவிரதம் இருந்த இடத்தின் அருகே அன்னதானம் தர போலீசார் அனுமதி கொடுத்ததால் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து வேறு இடத்தில் ஓபிஎஸ் அணியினர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.