திருச்சி, மதுரையிலிருந்து பெங்களூருக்கு தினசரி ரயில்.. சாப்ட்வேர் இன்ஜினியர்கள் எதிர்பார்ப்பு
திருச்சி: பெங்களூரில் பணிபுரியும், திருச்சி மற்றும் அதை சுற்றியுள்ள நகரங்களை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர்கள் வசதிக்காக, திருச்சி-பெங்களூர் நடுவே தினசரி ரயில் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
பெங்களூரிலுள்ள சாப்ட்வேர் நிறுவனங்களில் திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலுள்ள பல சாப்ட்வேர் இன்ஜினியர்கள் பணியாற்றுகின்றனர். வெள்ளிக்கிழமைகளில் சொந்த ஊர் திரும்பும் அவர்கள், ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டு, திங்கள்கிழமை தங்கள் பணிகளுக்கு திரும்புவது வாடிக்கை.
திருச்சி நிலைமை
இதேபோன்றுதான், சென்னை மற்றும் கோவையை சேர்ந்த பலரும், பெங்களூர் சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு வீக் என்டுகளில் சொந்த ஊர் சென்று திரும்புகின்றனர். ஆனால், அந்த நகரங்கள், பெங்களூரில் இருந்து ரயில் மார்க்கமாக நன்கு இணைக்கப்பட்டுள்ளன. ஆனால், இதில் திருச்சி நிலைமைதான் மோசம்.
ஒரு ரயில்
திருச்சியில் இருந்து பெங்களூருக்கு செல்ல, மயிலாடுதுரை-மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றே உள்ளது. இந்த ரயிலும் கூட்ட நெரிசலில் சிக்கி திணறுகிறது. இதனால், சாப்ட்வேர் இன்ஜினியர்கள், ஆம்னி பஸ்களில் பயணிக்கும் நிலைமை. அதன் கட்டணம் மிக அதிகம். மேலும், ரயிலுடன் ஒப்பிட்டால் ஓய்வெடுக்கும் வசதி மிக குறைவு.
மணப்பாரை வழியாவது
இதனால், பெங்களூர்-திருச்சி இடையே தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட வேண்டும் என்று 'டெக்கிகள்' எதிர்பார்க்கின்றனர். சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் திருச்சி, ராஜ்யசபா உறுப்பினர் என்.சிவா, ஒரு யோசனையை முன்வைத்தார். புதிய ரயிலை இயக்க முடியாவிட்டால், திண்டுக்கல், கரூர், நாமக்கல் வழியாக பயணிக்கும் நாகர்கோயில்-பெங்களூர் தினசரி ரயிலை, மணப்பாரை வழியாக செல்ல ஏற்பாடு செய்யுங்கள். திருச்சி பயணிகளுக்கு வசதியாக இருக்கும் என்பது அந்த யோசனை. ஆனால், அதுவும் செயல்பாட்டுக்கு வரவில்லை.
ஏன் நின்றது
சில வருடங்கள் முன்பு திருச்சியில் இருந்து அரியலூர், விருத்தாச்சலம், சேலம் வழியாக பெங்களூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. ரயிலில் கூட்டம் அலைமோதியபோதிலும், அந்த ரயில் ஏன் ரத்தானது என்பது ரயில்வே துறைக்கே வெளிச்சம். பெங்களூர் சிட்டி ரயில் நிலையத்தில், கூடுதலாக ரயில்களை நிறுத்த வசதியில்லாததே அந்த நகருக்கு கூடுதல் ரயில்கள் இயக்கப்படாமல் இருக்க காரணம் என்று ரயில்வே வட்டாரங்கள் கூறுகின்றன.
மதுரைக்கும் வேண்டும்
திருச்சியை போலவே, மதுரையில் இருந்தும் பெங்களூருக்கு கூடுதல் ரயில் தேவை என்ற கோரிக்கையும் அதிகரித்து வருகிறது. தற்போது நாகர்கோயில் மற்றும் தூத்துக்குடியில் இருந்து முறையே பெங்களூர் மற்றும் மைசூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள்தான், மதுரை வழியாக செல்கின்றன. இந்த ரயில்களும் எப்போதும் கூட்டத்தோடே காணப்படுகின்றன.