பாகுபலியும்.. எம்.ஜி.ஆரும்.. எப்பூடி!
சென்னை: பாகுபலி ஜூரம் மெல்ல மெல்லக் குறைவது போலத் தெரிந்தாலும் கூட இன்னும் பலர் அந்த ஜூரத்திலேயே உருண்டு புரண்டு கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் வாட்ஸ் ஆப்பில் ஒரு செய்தியைப் பார்த்தபோது அட என்று ஆச்சரியப்பட வைத்தது.
பாகுபலியையும், எம்.ஜி.ஆர். நடித்த அடிமைப்பெண் படத்தையும் ஒப்புமைப்படுத்தி வந்த செய்தி அது.
ஐலவ் சினிமா என்ற இணையத்தில் வெளியாகியுள்ள இந்த செய்திதான் இப்போது வாட்ஸ் ஆப்பை கலக்கிக் கொண்டிருக்கிறது. வாங்க என்னன்னு பார்ப்போம்...
அடிமைப்பெண் - பாகுபலி
அடிமைப்பெண் 1969ம் ஆண்டு வெளியான அக்காலத்து பிரமாண்டப் படம். பாகுபலி 2015ல் வெளியான பிரமாண்டப் படம்.
46 வருடங்களுக்கு முன்பு
46 வருடங்களுக்கு முன்பு வெளியான படம்தான் அடிமைப்பெண். இந்தப் படத்தின் ஒவ்வொரு அம்சமும் அக்காலத்தில் வெகுவாக சிலாகித்துப் பார்க்கப்பட்டது, ரசிக்கப்பட்டது.
நிஜ சிங்கத்துடன் சண்டை போட்ட "வாத்தியார்"
அடிமைப் பெண் படத்தில் நிஜ சிங்கத்துடன் சண்டை போட்டிருப்பார் எம்.ஜி.ஆர். இந்தப் படத்துக்காக, அந்த சிங்கத்தை தனது வீட்டுக்கே வரவழைத்து தினசரி சாப்பாடு போட்டு அதை தனக்குப் பழக்கிக் கொண்டாராம் எம்.ஜி.ஆர். கிளைமேக்ஸ் காட்சியில் இந்த சிங்கச் சண்டை மயிர்க்கூச்செறிய வைத்தது அந்தக் காலத்து ரசிகர்களை.
ஜெய்ப்பூர் அரண்மனையில்
படத்தின் பெரும்பாலான காட்சிகளை ஜெய்ப்பூர் அரண்மனையில் வைத்திருந்தனர். ராஜஸ்தான் பாலைவனத்தில் ஒட்டகச் சண்டைக் காட்சிகளைப் படமாக்கியிருந்தனர்.
செட் போட்டும் அசத்தல்
அதேபோல மிகப் பெரிய அரண்மனை செட் போட்டும் எம்.ஜி.ஆர் போடும் பிரமாண்ட சண்டைக் காட்சியையும் சிலிர்க்க வைக்கும் வகையில் படமாக்கியிருந்தனர்.
கண்ணைப் பறித்த கத்திச் சண்டை
எம்.ஜி.ஆர். போட்ட கத்திச் சண்டை இந்தப் படத்தில் ரொம்ப பிரபலம். மிகப் பெரிய வாளுடன் எதிரிகளுடன் அவர் போட்ட இந்த சண்டை அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
கதை கிட்டத்தட்ட ஒன்றுதான்
பாகுபலி படத்தின் கதையும், அடிமைப் பெண் படத்தின் கதையும் கிட்டத்தட்ட ஒன்றுதான் - மன்னரான தந்தை கொல்லப்பட்ட பின்னர் மகன் அதற்குப் பழிவாங்குகிறான். 25 ஆண்டுகளாக அடிமைச் சங்கிலியில் கட்டுண்டு கிடக்கும் தனது தாயை மீட்கிறான்.
திருப்பம்.. திரில்
சாதாரண இந்தக் கதையை திருப்பங்கள், ஆச்சரியங்களுடன் விறுவிறுப்பாக படமாக்கியிருப்பார்கள் அடிமைப்பெண் படத்தில். காதல் காட்சிகள், சண்டைக்
காட்சிகள், வீராவேசம், கோபம், குரோதம், துரோகம், வர்த்தகம் என அத்தனையும் கலந்த அதிடிப்படம் அடிமைப்பெண்.
ஹீரோயினும், வில்லியும்
ஜெயலலிதா இந்தப் படத்தில் பிரமாதப்படுத்தியிருப்பார் நடிப்பில். நாயகியாகவும், வில்லத்தனம் கொண்டவராகவும் பயமுறுத்தியிருப்பார்.
சிலிர்க்க வைத்த கிளைமேக்ஸ்
கிளைமேக்ஸ் மிகவும் உணர்ச்சிகரமாக, திரில்லாக இருக்கும். வெறும் கையுடன், கிரேக்க நாட்டு ஸ்டைலில் எம்.ஜி.ஆர். சிங்கத்துடன் போட்ட அந்த சண்டை.. இந்தக் காலத்து சிக்ஸ் பேக் ஹீரோக்கள் பிச்சை வாங்க வேம்ண்ம்.
100 நாள்தான் ஷூட்டிங்
அடிமைப் பெண் படத்தின் ஷூட்டிங் ஜஸ்ட் 100 நாட்களில் முடிந்து போனது. பாகுபலியின் ஷூட்டிங்கோ கிட்டத்தட்ட 3 வருடம் ஆனது.
வசூல் ராஜா
அடிமைப்பெண் படம் அப்போதைய கணக்குப்படி ரூ. 2.30 கோடியை வசூலித்ததாக கூறுகிறார்கள். இப்போதுள்ள கணக்குக்கு அது ரூ. 350 கோடி என்று கணக்கிடப்படுகிறது.
கம்ப்யூட்டர் இல்லை. கிராபிக்ஸும் இல்லை
அடிமைப்பெண் படமான காலத்தில் கம்ப்யூட்டர் கிடையாது, கிராபிக்ஸ் கிடையாது, அனிமேஷன் கிடையாது. பிளை கேம் கி்டையாது, ஹெலிகேம் கிடைாயது. அகேலா கிரேன் கிடையாது. டிஜிட்டல் கேமரா கிடையாது. எந்த வசதியுமே இல்லாத பட்டிக்காட்டு சினிமா சூழல் அப்போது இருந்தது. ஆனால் இசையில், நடிப்பில், பிரமாண்டத்தில் பிரமிக்க வைத்த படம் அடிமைப் பெண்.
தீர்ப்பு
எனவே பாகுபலியைப் பார்த்து பிரமிக்கும் அதே நேரத்தில் நம் "சொந்த" அடிமைப்பெண்ணை கொண்டாடுவோம். இந்தக் கால இளைஞர்கள் கட்டாயம் அடிமைப்பெண்ணை ஒருமுறை பார்க்குமாறு சொல்லுவோம்.. இப்படிப் போகிறது அந்த செய்திக் கட்டுரை.