"கஸ்தூரி" கிளம்பிருச்சாம்.. பூமாவும், கோதையும் வந்தாச்சு.. பிரணாம்பிகையும் புறப்பட்டாச்சு!
மேட்டுப்பாளையம்: நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தொடங்கவுள்ள யானைகள் புத்துணர்ச்சி முகாமுக்காக பல்வேறு ஊர்களிலிருந்து கோவில் யானைகள் வந்து குவிய ஆரம்பித்துள்ளன.
நாளை இந்த முகாம் தொடங்குகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இந்த யானைகள் நலவாழ்வு முகாம் நாளை தொடங்குகிறது.
நாளை தொடங்கி பிப்ரவரி 23ம் தேதி வரை 48 நாட்கள் இந்த முகாம் நடைபெறும். இதில் கோவில் யானைகள் பங்கேற்கின்றன. தமிழக கோவில்கள், மடங்களில் இருந்து 41 யானைகளும், புதுச்சேரி கோவில்களில் இருந்து 2 யானைகளும் பங்கேற்கின்றன.
வாக்கிங் மஸ்ட்
இந்த முகாமில் பங்கேற்கும் யானைகளுக்கு தினசரி வாக்கிங் கட்டாயமாகும். இதற்காக தனியாக நடை பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதில் டொண்டட்டாய்ங்..டொண்டட்டாய்ங் என்று அசைந்து அசைந்து தினசரி வாக்கிங் போக வேண்டும்.
குளிக்க மேடை ரெடி
அதேபோல யானைகள் குளிக்க தனியாக மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு போய் ஜாலியாக குளிக்கலாம். சாப்பிட தனியாக உணவுக் கூடமும் அமைக்கப்பட்டுள்ளது.
மருந்தும் தருவாங்க
உடம்புக்கு முடியாமல் யானைகளுக்கு மருந்து தர தயார் நிலையில் ஒரு மருந்தகமும் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யானைகள் வருகை
முகாமில் கலந்து கொள்வதற்காக கோவில் யானைகள் வர ஆரம்பித்துள்ளன. முதலாவதாக திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வர் சாமி தேவஸ்தானம் திருநள்ளாறு சனீஸ்வரபகவான் கோவில் யானை திர்க்ருரி வந்து சேர்ந்தது.
பூமாவும்.. கோதையும்
அதேபோலகும்பகோணம் தாலுகா ஒப்பிலியப்பன் வெங்கடாஜலபதி கோவில் யானை பூமாவும், ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோவில் யானை கோதையும் வந்து சேர்ந்தன.
பிரணாம்பிகை
அதேபோல புதுச்சேரி யூனியன் பிரதேசம், திருநள்ளாறு சனீ்ஸ்வரன் கோவிலைச் சேர்ந்த யானை பிரணாம்பிகையும் முகாமுக்குப் புறப்பட்டு வந்து கொண்டிருப்பதாக தகவல் வந்துள்ளது.
கஸ்தூரி
49 வயதான பழனி கோவில் யானை கஸ்தூரியும் முகாமுக்குப் புறப்பட்டு வருகிறது. அந்த யானையுடன் மருத்துவக் குழுவினரும் வருகிறார்கள்.
முகாகம் 'டாப்பர்' கஸ்தூரிதான்
கடந்த வருடம் நடந்த புத்துணர்வு முகாமின்போது கயிறு இழுக்கும் போட்டி உள்பட பல போட்டிகளில் கஸ்தூரி யானை முதல் பரிசை பெற்றது. அதேபோல பல ஊர்களில் இருந்து வந்த யானைகள் மீண்டும் ஊருக்கு செல்ல அடம்பிடித்தபோது கஸ்தூரி அவர்களுடன் லாவகமாக பழகி வழியனுப்பி வைத்தது. இந்த வருடமும் வழக்கமான உற்சாகத்துடன் கஸ்தூரி யானை கிளம்பி வந்து கொண்டிருக்கிறதாம்.
வாங்கம்மா வாங்கம்மா...!