சென்னையில் பயங்கரம்.. பூசாரியை கழுத்து அறுத்து கொன்ற போதை வாலிபர்
சென்னை: பழைய வண்ணாரப்பேட்டையில் கோயில் பூசாரியின் தலையில் அம்மிக்கல்லை போட்டும், கழுத்தை அறுத்தும் கொலை செய்யபட்டுள்ளார். இது தொடர்பாக போதை வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பழைய வண்ணாரப் பேட்டை டி.எச்.சாலையைச் சேர்ந்தவர் கார்த்திக் ராஜா (32). இவர் தங்கசாலையில் உள்ள ஆதிபராசக்தி எல்லையம்மன் கோயிலில் பூசாரியாகவும் இருந்து வந்தார்.

இவரது உறவினர் ஏழுமலை (25) குடிப்பதற்காக கார்த்திக் ராஜாவிடம் அடிக்கடி பணம் வாங்குவாராம். கார்த்திக் ராஜா பணம் கொடுக்கும்போதெல்லாம் ஏழுமலையை திட்டி அனுப்புவாராம்.
இந்நிலையில் நேற்று இரவு கார்த்திக் ராஜாவை சந்தித்த ஏழுமலை அவரது நண்பருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். இதனால், பணம் அதிகமாக தேவைப்படுவதால் பெரிய தொகை பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.
அதற்கு கார்த்திக் ராஜா, "உனக்கே இன்னும் திருமணம் ஆகவில்லை. நீ இன்னொருவருக்கு திருமணம் செய்து வைக்க போகிறாயா? என தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
இதனால் கார்த்திக் ராஜா மற்றும் ஏழுமலைக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. பின்னர், இருவரும் அங்கிருந்து சென்றுள்ளனர். இதையடுத்து கார்த்திக் ராஜா கோயில் பூஜையை முடித்த பிறகு வீட்டுக்கு செல்லாமல் அங்கேயே இரவு தூங்கியுள்ளார்.
இதையடுத்து, இன்று அதிகாலை கோயிலுக்கு வந்த ஏழுமலை கோயிலில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து தூங்கிக்கொண்டிருந்த கார்த்திக் ராஜா தலையில் போட்டுள்ளார். வலியால் கத்தி கதறிய கார்த்திக் ராஜாவை ஏழுமலை கழுத்தை அறுத்து விட்டு தப்பி ஓடியுள்ளார்.
யாரோ கத்திய சத்தம் கேட்டு வந்து பார்த்த பொதுமக்கள் கார்த்திக் ராஜா ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் வண்ணாரப்பேட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த போலீஸார், கார்த்திக் ராஜாவை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கே பரிசோதனை செய்த மருத்துவர்கள் கார்த்திக் ராஜா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து ஸ்டான்லி மருத்துவமனையிலேயே கார்த்திக் ராஜாவின் உடல் பிரேதப் பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டது.
இந்த கொலை தொடர்பாக தலைமை மறைவாக இருந்த ஏழுமலையை தேடிவந்த போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கோயில் பூசாரியை போதை வாலிபர் கழுத்து அறுத்து கொலை செய்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications