கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னையில் தற்காலிக பஸ் நிலையங்கள்!
சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்கேற்ப தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன
Recommended Video
சென்னை: பொங்கல் பண்டிகையொட்டி ஊருக்கு செல்லும் மக்களின் வசதியை கருத்தில்கொண்டும், கூட்ட நெரிசல்களை தவிர்க்கும் பொருட்டும் புதிதாக தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் 13ம் தேதி வரை, பயணிகள் வசதிக்காக, கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள் அதற்கென அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து புறப்படும் என, அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
பண்டிகைக்காலங்கள் என்றாலே சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு லட்சக்கணக்கான மக்கள் செல்வது வழக்கம். ஆனால் இந்த பயணங்கள் அவர்களுக்கு இன்பமாக அமைகிறதா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை என்று தான் பதில் வரும்.
ஸ்தம்பிக்கும் சென்னை
சென்னையில் வசிக்கும் பாதி பேர் வெளியூர் காரர்கள் என்பதால், பண்டிக்கை காலங்களில் அவர்கள் தங்களின் சொந்த ஊருக்கு சென்று வழக்கம். அலுவலக விடுமுறை, பள்ளி விடுமுறை என்று அனைவரும் ஒன்றாக ஒரே நாளில் ஒரே நேரத்தில் கிளம்புவதால் சென்னை அந்த நேரத்தில் ஸ்தம்பிப்பது வழக்கம்.
நெரிசலில் சிக்கும் பேருந்துகள்
தீபாவளி, பொங்கல் இந்த இரண்டு பண்டிகை நாட்களும் முன்னும், பின்னும் பேருந்துகளில் கூட்டம் வழிந்தோடும். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவியும் மக்கள், கிடைக்கும் பேருந்துகளில் எல்லாம் ஏறிக்கொள்வதால் சரக்கு லாரி போல பேருந்தும் அசைந்து அசைந்து செங்கல்பட்டை தாண்டுவதற்குள் குறைந்தது 4 முதல் 5 மணி நேரமாகி விடும்.
சிறப்பு பேருந்து நிலையங்கள்
போக்குவரத்து நெரிசல், கூட்ட நெரிசல் என்று மக்கள் சிக்கிக்கொள்வதால் சொந்தங்களை பார்க்க போகிறோம் என்ற சந்தோஷத்தை விட, ஏண்டா பண்டிகை காலம் வருகிறது என்ற அலுப்புடன் மக்கள் சொந்த ஊருக்கு பயணம் செய்யும் நிலை உருவாகிட்டது. இதனை கருத்தில் கொண்டு, கோயம்பேடு பேருந்து நிலையத்தையும் சேர்த்து ஐந்து தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேற்கு அண்ணா நகர் பேருந்து நிலையம்
செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்துக்குச் செல்லும் அனைத்து தமிழக மற்றும் ஆந்திர மாநில பேருந்துகள் அண்ணா நகர் மாநகர போக்குவரத்து கழக பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.
சைதாப்பேட்டை நீதிமன்ற பேருந்துநிலையம்
கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் சைதாப்பேட்டை நீதிமன்ற பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.
தாம்பரம் சானிட்டோரியம் பேருந்துநிலையம்
திண்டிவனம், விக்கிரவாண்டி வழியாக பண்ருட்டி, கும்ப கோணம், தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் அனைத்து வழித்தட பேருந்துகள் தாம்பரம் சானிடோரி யம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.
பூவிருந்தவல்லி பேருந்து நிலையம்
வேலூர் மார்க்கமாக பூவிருந்த வல்லி வழியாக ஆரணி, ஆற்காடு, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் ஓசூர் போன்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.
கோயம்பேடு பேருந்து நிலையம்
எஞ்சிய ஊர்களான இதர மயிலாடு துறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, கோயம்புத்தூர், எர்ணாகுளம் செல்லும் பேருந்துகள் வழக்கம் போல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தும் புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திண்டிவனம் வழியாக விழுப்புரம், பண்ருட்டி, நெய்வேலி, கடலூர், சிதம்பரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை செல்லும் பேருந்துகளும் இங்கிருந்து புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.