சுனாமியில் கரைந்த சொந்தங்கள்… கடலூர், நாகையில் 10 ஆண்டுகளாய் கலங்கும் இதயங்கள்…
கடலூர்: மகனை காவு கொண்ட கடல்... மகளை இழுத்துச்சென்ற ஆழிப்பேரலை.... கிரிக்கெட் பேட்டை அணைத்துக்கொண்டே உயிரை விட்ட புதல்வன் என கடலூர் கடற்கரை கிராமத்தில் சுனாமி தாக்கியதன் சோகவடு ஆறவில்லை.
பத்தாண்டுகளுக்கு முன்னர் இதே நாளில்தான் தமிழகத்தின் கடலோர கிராமங்களை ஆழிப்பேரலை தன் கொடூர நாக்குகளால் விழுங்கி கபளீகரம் செய்தது. இந்த நாளில் சொந்தங்களை இழந்தவர்கள் நினைவிடங்களுக்குச் சென்று பால் ஊற்றி கண்ணீர் மல்க தங்களின் துக்கத்தை பகிர்ந்து கொள்கின்றனர்.

சுனாமியின் துயரம்
2004 டிசம்பர், 26ஆம் தேதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் 30 கி.மீ., ஆழத்தில், ரிக்டர் அளவில் 9.1 என்ற அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டது. இதையடுத்து எழும்பிய ஆழிப்பேரலைகள் இந்தோனேசியா, இந்தியா, மியான்மர், சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து உட்பட 14 நாடுகளில் கடும் சேதத்தை ஏற்படுத்தி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. 2லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர்.
தமிழகத்தின் துயரம்
இந்தியாவில் தமிழகம், ஆந்திரா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களை சுனாமி தாக்கியது. இந்தியாவில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். தமிழகத்தில் மட்டும் 7 ஆயிரம் பேரை காவு கொண்டது சுனாமி. தமிழக கடலோர மாவட்டங்களான சென்னை, நாகை, கடலூர், கன்னியாகுமரி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
மோசமான நிலை
சுனாமி தாக்கி பத்து ஆண்டுகள் உருண்டோடிவிட்டபோதிலும், அதனால் வாழ்க்கையைத் தொலைத்த பல குடும்பங்கள், இதுவரை, இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவிக்கின்றன. ஆழிப்பேரலைக்கு முன்பு இருந்த நிலையைவிட தற்போது மோசமான சூழலில் வசித்து வருவதாக அந்தக்குடும்பத்தினர் கூறுகின்றனர்.
கடலூரில் சோகம்
கடலூரும், நாகை மாவட்டங்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் அதிக உயிர்சேதம் ஏற்பட்டது பரங்கிப்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட கொத்தட்டை புதுக்குப்பம் கிராமம்தான். இங்குமட்டும் 120 பேர் அன்றைய தினம் பலியாகியுள்ளனர்.
பெற்றோரை இழந்தவர்கள்
பெற்றோரை இழந்த பிரதிபா, அபிநயா, அஜீத்குமார், ஆகியோரை சொந்த தாய்மாமன்தான் வளர்த்து வருகிறார். பெற்றோரை பறிகொடுத்தபோது பத்து வயது, எட்டுவயது என இருந்த இவர்கள் தற்போது வளர்ந்து பெரியவர்களாகிவிட்டனர். வறுமை வாட்ட படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு கூலிவேலைக்குச் செல்கின்றனர்.
கணவரும் குழந்தைகளும்
அதே கிராமத்தை சேர்ந்த சசிகலாவின் கணவரும், மூன்று குழந்தைகளும் சுனாமி நாளில் கடலால் காவு வாங்கப்பட்டவர்கள். அரசு கொடுத்த நிதி உதவி கடனுக்கே சரியாகிவிட்டது. சுனாமி வீடும் கிடைக்கவில்லை, விதவை பென்சனும் இல்லை என்கிறார் சசிகலா.
மகன் வருவான்
கிருஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட குடும்பத்தோடு வேளாங்கண்ணிக்கு போன சூசைராஜ் தன் கண் முன்னே மகளையும், மகனையும் கடல் இழுத்துச்செல்வதைக் கண்டவர். அந்த துயரம் மாறாமல் இன்னமும் பேசுகிறார். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தன் மகனைப் போலவே இருந்தவரை பார்த்துள்ளார். ஆனால் இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதுதான் அவரது சோகம். தற்போது புதுவையில் போலீசாக இருக்கும் சூசைராஜூக்கு என்றாவது ஒருநாள் தன் மகன் வருவான் என்ற நம்பிக்கை இருக்கிறது.
உடமைகள் இழந்து
கடலையே நம்பியிருந்த தேவனாம்பட்டினம் மீனவ கிராம மக்களுக்கு கடலை கண்டாலே அச்சம் ஏற்படும் வகையில் அந்த ஆழிப்பேரலை மற்றியது. இந்த இயற்கை சீற்றத்தால் கடலூர் மாவட்டத்தில் 618 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் தங்களது உறவுகள், வீடுகள், உடைமைகள் போன்ற அனைத்தையும் இழந்தனர்.
அவல நிலை
வீடுகளை இழந்தவர்களுக்கு சில தனியார் தொண்டு நிறுவனங்கள், அரசுடன் இணைந்து, மீண்டும் தாக்குதல் ஏற்பட்டால் சேதம் ஏற்படாத அளவிற்கு கடலிலிருந்து தூரமாக உள்ள இடத்தில் 648 வீடுகள் கட்டிக்கொடுத்தன. இதில் குடியேறிய தேவனாம்பட்டினம் கிராம மக்கள் இது நாள் வரை போதிய அடிப்படை வசதியின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
நாகையிலும் இதே நிலை
நாகை மாவட்டம் செம்பனார் கோவிலில் சுனாமிக்கு 200 பேர் வரை பலியாகினர். சுனாமி தாக்கியபோது ஏராளமானோர் வாட்டர் டேங்க் மேல் ஏறிதான் தப்பித்துள்ளனர். சுனாமிதாக்கிய வடு இன்னமும் இந்த கிராமத்தில் மாறவில்லை.
மகளை பறிகொடுத்த தந்தை
சுனாமி தினத்தன்று கடற்கரையில் கிரிக்கெட் விளையாடிய பல குழந்தைகளை ஆழிப்பேரலை சுருட்டிச்சென்றது என்கிறார் மகள் சுமத்ராவை பறிகொடுத்த குமார். மகளை தேடி அலைந்த போது பலியான சிறுவர்கள் கிரிக்கெட் மட்டையை அணைத்தபடி உயிரை விட்டிருந்தனராம்.
அழுகையே ஆறுதல்
இப்படி சூசைராஜூம், குமாரும், சசிகலாவும் போல எத்தனையோ மக்கள் சுனாமிக்கு சொந்தங்களை பறிகொடுத்துவிட்டு கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கின்றனர். சுனாமி தாக்கிய இந்த நாளில் கடற்கரைக்குப் போய் அவர்களை நினைத்து அழுது ஆறுதல் பட்டுக்கொள்கின்றனர். இவர்களுக்காக கொடுக்கப்பட்ட நிதிதான் இவர்களை சென்றடையவில்லை என்பது இவர்களின் புகராக உள்ளது.
சுனாமி நிதி சுருட்டல்
சுனாமி வந்து பத்து நிமிடத்தில் சுருட்டிக்கொண்டு போய்விட்டது. ஆனால் அதன் வடுக்கள்தான் இன்னமும் மறையவில்லை. இழந்த வீடுகளுக்கு பதிலாக இன்னமும் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படவில்லை. சுனாமி நிதியை சுருட்டிவிட்டனர் கொள்ளையர்கள். ஆனால் பத்தாண்டுகளாய் நிவாரணம் கேட்டு அலையும் மக்களின் அவலம்தான் சுனாமி தாக்கிய சோகத்தை விட கூடுதலாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications