வாழ்த்துகள் ஸ்ரீமதி..விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி..! பிரமிக்க வைத்த பீடி சுற்றும் தொழிலாளியின் மகள்!
தென்காசி: சிவில் சர்வீஸ் பணிக்கான தேர்வில் தென்காசியை சேர்ந்த பீடி சுற்றும் தொழிலாளி மகள் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. வசதியில்லாததால் வீட்டிலிருந்தே படித்த அவர், 3வது முயற்சியில் தனது கனவை நனவாக்கியிருக்கிறார்.
இந்திய நாட்டின் மிக உயரிய பணிகளில் ஒன்றாக கருதப்படும் இந்திய ஆட்சிப் பணி தேர்வுக்கான யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

நாட்டில் லட்சக்கணக்கானோர் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினாலும் சில நூறு பேர் மட்டுமே இந்த பணிக்கு தேர்வாகிறார்கள். அந்த அளவுக்கு இந்த தேர்வுகள் மிகவும் கடுமையானது. 3 படிநிலைகளை கடந்து வந்த பின்பே இந்த தேர்வில் வெற்றி பெற முடியும்.
சிவில் சர்வீஸ் என்பது ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட நாட்டின் உயரிய பணியிடங்களுக்கான மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் தேர்வாகும். அந்த வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வானது முதல் நிலை, முதன்மை மற்றும் நேர்காணல் என 3 பிரிவுகளாக நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு 1016 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்த ஆண்டும் தமிழகத்தில் ஏராளமானோர் வெற்றி பெற்று மத்திய அரசு பணிகளுக்கு தேர்வாகியுள்ளனர். அந்த வகையில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள விஸ்வநாதபுரம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்பவரது மகளான ஸ்ரீமதி இம்பா ஸ்டெல்லா வெற்றி பெற்றுள்ளார். பீடி சுற்றும் தொழிலாளியான சீனிவாசன் மிகுந்த வறுமையான சூழ்நிலையிலும் தனது மகளை படிக்க வைத்தார்.

தொடர்ந்து கணினி படிப்பில் பட்டம் வாங்கிய ஸ்ரீமதி தற்போது கோவை மண்டல பிஎஃப் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். அதே நேரத்தில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மத்திய அரசு பணிகளுக்காக தயாராகி வந்த அவர் தற்போது சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று இருக்கிறார். தேசிய அளவில் 851வது பெற்றிருக்கும் இவர் விரைவில் பணி ஒதுக்கீடு முடிவடைந்ததும் பணியில் சேர இருக்கிறார்.
ஏழ்மையான சூழலில் தொடங்கிய தனது வாழ்க்கை பயணம் ஒவ்வொரு தேர்வாக எழுதி பணியை பெற்ற நிலையில் தற்போது உயரிய பணியான சிவில் சர்வீஸ் பணியை பெற்றிருப்பது தனக்கு மகிழ்ச்சிகரமானதாக இருப்பதாக கூறுகிறார் ஸ்ரீமதி இன்பா ஸ்டெல்லா.
முதலில் தான் பங்கேற்ற இரு தேர்வுகளில் தோல்வி அடைந்த போதும் அதனை பொருட்படுத்தாமல் கடுமையாக உழைத்ததன் பயனாக 3வது முயற்சியில் தான் வெற்றி பெற்று இருப்பதாகவும் சிறப்பு வகுப்புகளுக்கு சென்று கடுமையாக முயற்சி செய்ததால் வெற்றி பெற முடிந்திருக்கிறது என கூறும் ஸ்ரீமதி வாழ்வில் முன்னேற வேண்டும் என்று வெறியோடு படித்தால் அனைவரும் எத்தகைய தேர்வாக இருந்தாலும் வெற்றி பெறலாம் என கூறுகிறார்.












Click it and Unblock the Notifications