போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவி... அப்பல்லோவில் அதிரடியாக நுழைந்த ‘மர்ம நபர்’ யார்?
சென்னை: முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் அப்பல்லோ மருத்துவமனைக்குள் போலீசாரின் பாதுகாப்பை மீறி நுழைய முயன்ற மர்மநபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீசாரின் விசாரணையில் அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களைத் தெரிவித்ததால் அவர் மீதான சந்தேகம் அதிகரித்துள்ளது.
தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
ஜெயலலிதா சிகிச்சைப் பெற்று வருவதால், அப்பல்லோ மருத்துவமனைக்கு தினமும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வந்து செல்கின்றனர். அதோடு மருத்துவமனை வாசலில் எப்போதும் அதிமுகவினர் கூட்டம் காணப்படுகிறது. இதனால் அப்பல்லோவிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, அப்பல்லோ மருத்துவமனைக்குள் செல்ல பலத்த கட்டுப்பாடு நிலவுகிறது. குறிப்பாக ஜெயலலிதா சிகிச்சை பெறும் இரண்டாவது தளத்தில் யாரும் அனுமதியின்றி செல்ல முடியாது. நீண்ட விசாரணைக்குப்பிறகே சிகிச்சைக்குரிய ஆவணங்கள் இருந்தால் மட்டுமே மருத்துவமனைக்குள் நோயாளிகளும், பார்வையாளர்களும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று போலீசாரின் கண்ணில் மண்ணைத் தூவி மர்மநபர் ஒருவர் அப்பல்லோவிற்குள் நுழைய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மெயின் கேட்டைத் தாண்டி வேகமாக அவர் மருத்துவமனைக்குள் நுழைய முற்பட்டதால், போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
எனவே, அவரைத் தடுத்து நிறுத்தி அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் மாறி, மாறி முன்னுக்குப்பின் முரணாக பேசிய அவர் தன்னுடைய பெயர் உமேஷ்ரெட்டி எனத் தெரிவித்துள்ளார். மேலும் அப்பல்லோவில் சிகிச்சைப் பெற செல்வதாக கூறிய அவரது கையில், அதிமுக துண்டு இருந்துள்ளது. இதனால், போலீசாரின் சந்தேகம் அதிகரித்தது.
இதனால் அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் ஜெயலலிதாவைக் காணும் ஆர்வத்தில் அப்பல்லோவில் நுழைய முற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு போலீஸ் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கவனக்குறைவாக செயல்பட்ட போலீசாரிடமும் விசாரணை நடத்தப்படுகிறது.