என்னது அதிமுகவிடம் 2 சீட் கேட்டோமா?: தா.பா. மறுப்பு (அப்ப சீட்டே கேட்கலையா?!)
சென்னை: லோக்சபா தேர்தலில் அதிமுகவிடம் 2 தொகுதிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்டதாக வெளியான செய்திகளை அக்கட்சியின் தமிழ் மாநில செயலர் தா. பாண்டியன் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக தா. பாண்டியன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எஸ்.சுதாகர ரெட்டி, மூத்த தலைவர் ஏ.பி.பரதன் ஆகியோர் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவை ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 2) பிற்பகல் சந்தித்துப் பேசினர். அப்போது கட்சியின் மாநிலச் செயலாளரான நானும் (தா.பாண்டியன்) உடன் இருந்தேன்.

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக - காங்கிரசுக்கு எதிராக மாற்று அணியை உருவாக்க அதிமுகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் முடிவு செய்துள்ளன என்றும், தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள், தேர்தல் பணிகள் பற்றி பின்னர் பேச இருப்பதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், சில நாளிதழ்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இரண்டு தொகுதிகளைக் கேட்டதாக கட்சியைச் சேர்ந்தவர் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது. இத்தகைய தகவல்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த யாரும் தெரிவிக்கவில்லை.
குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்குடன் வெளியிடப்படும் செய்திகளைப் புறக்கணிக்குமாறும், கட்சிப் பத்திரிகையான ஜனசக்தியில் வெளியிடப்படும் செய்தியை மட்டுமே ஆதாரமாகக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தா. பாண்டியன் தமது அறிக்கையில் கேட்டுள்ளார்.
அப்ப சீட்டே கேட்கலையோ? வெறும் பிரசாரம் மட்டும்தானா!!












Click it and Unblock the Notifications