ரஜினிகாந்த் அரசியலில் தாக்குபிடிக்க முடியாது; அவர் ஒரு தனிமை விரும்பி -தமிமுன் அன்சாரி
மயிலாடுதுறை: ரஜினிகாந்த் அரசியலில் தாக்குபிடிக்க முடியாது என்றும் அவர் ஒரு தனிமை விரும்பி எனவும் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் இதனைக் கூறினார்.
அரசியலை பொறுத்தவரை மன உளைச்சல், நெருக்கடி, வசவுகள் என இருக்கும் என்றும் இதனால் தான் அரசியலில் ரஜினிகாந்த் தாக்குபிடிக்க முடியாது என தாம் கூறுவதாகவும் விளக்கம் அளித்தார். ரஜினியை பொறுத்தவரை அவர் ஒரு அமைதி விரும்பி என்றும் அப்படியிருக்கும் போது அவரால் கூட்ட நெரிசல்களை எப்படி சமாளிக்க முடியும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசியலில் மூப்பனார் ரஜினிகாந்துக்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததாகவும் ஆனால் அதனை பயன்படுத்திக் கொள்ள ரஜினி தவறவிட்டார் எனவும் கூறினார். மூப்பனார் இருந்த போது அவர் ஏற்படுத்திக் கொடுத்த வழியில் ரஜினி பயணித்திருந்தால் இந்நேரம் தமிழகத்தின் முக்கியப் பதவியில் அவர் இருந்திருப்பார் எனக் கூறினார்.
மேலும், இந்த தேர்தலில் அவர் அரசியலுக்கு வரவில்லை என்றால் இனி எந்தக் காலத்திலும் அவரால் வரமுடியாது என தமிமுன் அன்சாரி கூறியுள்ளார். ரஜினியின் அரசியல் பிரவேசம் என்பது தொடர்ந்து கேள்விக்குறியாகவே உள்ளதாக அவர் விமர்சித்தார்.
முன்னதாக மனிதநேய ஜனநாயக கட்சிக்கு உறுப்பினர்களை சேர்க்கும் பணியை குத்தாலத்தில் தமிமுன் அன்சாரி தொடங்கி வைத்தார். அப்போது ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் தமிமுன் அன்சாரி முன்னிலையில் மஜகவில் இணைந்தனர்.