மு.க. ஸ்டாலினை சந்திக்க மோடிக்கு என்ன அவசியம் இருக்கு.. பாஜக தமிழிசை ஆவேசம்
தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினை சந்திக்க பிரதமர் மோடிக்கு அவசியம் என்ன இருக்கிறது என்று தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: எந்தவித பொறுப்பிலும் இல்லாத ஒருவரை சந்திக்கும் பிரதமர் மோடிக்கு பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவரை, விவசாயிகளை சந்தித்து பேச மனம் வரவில்லை என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
அண்மையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லிக்கு சென்று பிரதமரை சந்தித்தார். எந்தவித பொறுப்பிலும் இல்லாத ஓபிஎஸ், சந்திக்க நேரம் கேட்டவுடன், உடனடியாக அனுமதி கொடுக்கப்பட்டு டெல்லிக்கு சென்று பிரதமரை பார்த்து விட்டு வருகிறார் என்று ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
டெல்லிக்கே சென்று ஏறக்குறைய 50 நாட்கள் போராடிய தமிழக விவசாயிகளை பிரதமர் சந்திக்கவில்லை என்றும் ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார்.
அவசியம் இல்லை
இதற்கு பதில் அளிக்கும் வகையில் பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை, ஸ்டாலினை பிரதமர் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளார். அரசியல் ஆதாயம் தேட ஸ்டாலின் முயற்சி செய்கிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.
அனைத்துக் கட்சிக் கூட்டம்
விவசாயிகள் பிரச்சனைகள் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் தமிழக அரசு கூட்டவில்லை. இதனால் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுவதாக பல முறை கூறினார். எனினும், விவசாயிகள் பிரச்சனை குறித்து ஸ்டாலின் ஏன் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டுகிறார் என்றும் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தல்
இரட்டை இலை சின்னத்திற்காகத்தான் உள்ளாட்சித் தேர்தலை மாநில அரசு தள்ளிப் போட்டு வருகிறது என்று தமிழிசை தமிழக அரசை குற்றம்சாட்டியுள்ளார். அதிமுகவிற்குள் நடக்கும் சண்டையால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.
ஓபிஎஸ்யுடன் கூட்டணி
உள்ளாட்சித் தேர்தலில் ஓபிஎஸ் பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம் என்று தமிழிசை ஓபிஎஸ் அணிக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு முன்னர் நேரடியாக எந்த அழைப்பையும் கொடுக்காத பாஜக தற்போது ஓபிஎஸ்ஸுடன் கூட்டணி வைக்க அழைப்புவிடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.