For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'தடை நீங்கியது.. ஆனால் ஐஐடி நிர்வாகத்தை மன்னிப்பு கோர வைக்க முடியவில்லையே!'

By Shankar
Google Oneindia Tamil News

சென்னை: அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்துக்கான தடை நீங்கியிருக்கிறது. ஆனால் நியாயமற்ற இந்த தடை விதித்த ஐஐடி நிர்வாகத்தை மன்னிப்பு கோர வைக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர் மாணவர்கள்.

இதுகுறித்து அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

எங்கள் மீதான தடை நீக்கப்பட்டிருக்கிறது. ஐ.ஐ.டி நிர்வாகத்தின் மொழியில் கூறுவதானால், எங்களது அங்கீகாரம் மீளத் தரப்பட்டிருக்கிறது.

'The ban Lifted.. But...' - Ambedkar Periyar Study Circle statement

எங்கள் மீது என்ன காரணத்தினால் இந்த தடை விதிக்கப்பட்டதென்பது உலகத்துக்கே தெரியும். மாணவர்களுக்கான டீன் (DoS), படிப்பு வட்டத்தின் பெயரை மாற்றச் சொன்னார் என்ற உண்மை, ஒரு மொட்டைக் கடிதத்தின் மீது விளக்கம் கோரும் அமைச்சகத்தின் சட்ட விரோத நடவடிக்கை, எங்களைப் போன்ற மாணவர் குழுக்களைத் தடை செய்யவேண்டுமென்று ஐ.ஐ.டி நிர்வாகத்திடம் பேசியதாக, பாஜக மாநிலத் துணைத்தலைவர் ஹெச்.ராஜா ஊடகங்களுக்கு அளித்திருக்கும் ஒப்புதல் வாக்குமூலம் - இவையனைத்தும் இன்று எல்லோருக்கும் தெரியும்.

இருப்பினும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரின் கூற்றுப்படி இது ஐ.ஐ.டி நிர்வாகம் சுயேச்சையாக எடுத்த நடவடிக்கை. ஆகவே இது தங்களது சொந்த நடவடிக்கை என்றே ஐ.ஐ.டி நிர்வாகம் கூறிக்கொள்கிறது. அப்படித்தானே இருந்தாக வேண்டும். எங்களது அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதற்கு காரணம், ஐ.ஐ.டி யின் பெயரை அனுமதியில்லாமல் பயன்படுத்தினோம் என்பதுதானாம். அது நடத்தை விதிகளுக்கு முரணானதாம். நடத்தை விதிகள் ஏப்ரல் 18 அன்றுதான் அறிவிக்கப்பட்டன என்பதையும் எங்களது கூட்டம் ஏப்ரல் 14 அன்றே நடந்து விட்டது என்பதையும் இப்போதுதான் அவர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள். இந்த அடிப்படையில் நிபந்தனையற்ற முறையில் தடையை நீக்கியிருக்கிறார்கள். கடைசியில் இவ்வளவு அற்பமான ஒரு விவகாரம்தானா இது!

ஆகவே, அவர்களது விளக்கத்தின்படி இந்த தடைக்கும், அம்பேத்கர், பெரியார், பகத்சிங்குக்கும் தொடர்பில்லை. இந்து மதத்தின் மீதும் மோடி அரசின் மீதும் நாங்கள் முன்வைத்த விமரிசனத்துக்கும் இந்த தடைக்கும் தொடர்பில்லை. அவர்களுடைய வியாக்கியானமும் கயர்லான்ஜி வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பும் அப்படியே ஒத்துப்போகின்றன. கயர்லான்ஜி படுகொலைக்கும் தலித்துக்களுக்கு எதிரான சாதி ஆதிக்கவெறிக்கும் எந்தத் தொடர்புமில்லை என்றும் அது சாதாரணமான ஒரு பழிக்குப்பழி வாங்கும் கொலை என்றும் என்றும் கூறுகிறது அந்தத் தீர்ப்பு.

ஆகவே, எங்களது அங்கீகாரம் மீளத்தரப்பட்ட போதிலும், நடந்தவைகளுக்காக மன்னிப்பு கேட்க முடியாது என்று ஐ.ஐ.டி நிர்வாகம் மறுத்து விட்டது. அவர்களிடமிருந்து அங்கீகாரத்தை வெல்ல முடிந்தது. ஆனால், மன்னிப்பை வரவழைக்க எங்களால் முடியவில்லை. தீண்டத்தகாதோருக்கு தாங்கள் இழைத்த அநீதிகளுக்காக மனம் வருந்தி மன்னிப்பு கோருவதற்கு ஒரு வாய்ப்பளியுங்கள் என்று அம்பேத்கரிடம் காந்தி கோரிக்கை வைத்தாரே, அதுதான் எங்களுக்கு நினைவுக்கு வந்தது.

தனது தவறுக்காக வருந்துவதற்கு ஐ.ஐ.டி நிர்வாகத்துக்கு நாங்களும் ஒரு வாய்ப்பு கொடுத்தோம். ஆனால் அதனை அவர்கள் ஒரு வாய்ப்பாக கருதவில்லை. மாறாக, அச்சுறுத்தலாகப் பார்த்திருக்கிறார்கள். இதற்குப் பணியக்கூடாது என்று கருதியிருக்கிறார்கள். இதில் எங்களுக்கொன்றும் ஆச்சரியம் இல்லை. சாதி இந்து உளவியல் ‘கீழ்சாதியினரை' ஒடுக்குவது குறித்து ஒருபோதும் குற்றவுணர்வு கொள்வதில்லை. அவ்வாறு ஒடுக்குவது தனது நியாயவுரிமை என்றே அது கருதுகிறது என்பார் அம்பேத்கர்.

நூற்றுக்கணக்கான இசுலாமியர்களை கொலை செய்வது குறித்து குற்றவுணர்வு கொள்ளாத ஒரு மனம், கயர்லாஞ்சி, ஹசிம்புரா கொலைகாரர்கள் விடுதலை செய்யப்பட்டதைக் கொண்டாடும் ஒரு மனம், ஒரு படிப்பு வட்டத்தைத் தடை செய்வது குறித்தா குற்றவுணர்வு கொண்டு விடும்? அது ரொம்பவும் மிகையானதொரு எதிர்பார்ப்பல்லவா? அவர்கள் வருத்தம் தெரிவிக்கத் தயாராக இல்லை. நாங்களோ அவர்களிடமிருந்து மன்னிப்பை வரவழைக்கும் அளவுக்கு இன்னும் வலிமை பெற்றுவிடவில்லை.

நேற்று நிர்வாகத்துடனான பேச்சுவார்த்தை சுமார் 8 மணி நேரம் நீடித்தது. ஐ.ஐ.டி சென்னை வரலாற்றில், மாணவர்கள், அவ்வளவு ஏன், ஆசிரியர்களே கூட இத்தனை மணி நேரம், இயக்குநருடன் பேசியதில்லை என்கிறார்கள் ஐ.ஐ.டி ஊழியர்கள்.
இந்தச் சிறிய வெற்றி நிர்வாகத்தின் நியாயவுணர்ச்சியிலிருந்து பிறக்கவில்லை. ஜனநாயக சக்திகளின் நிர்ப்பந்தம் இந்த வெற்றியை வரவழைத்திருக்கிறது.

எல்லா மாணவர் அமைப்புகளும் சமமாக நடத்தப்படுவார்கள் என்று ஐ.ஐ.டி நிர்வாகம் கொள்கையளவில் ஒப்புக்கொண்டிருக்கிறது. ஆனால் எங்களுக்கெதிரான மனதில் வேரோடியிருக்கும் வெறுப்பு, அவ்வாறு சமமாக நடத்துவதற்கு அவர்களை அனுமதிக்காது.

ஏனென்றால் எங்களை சமமாக நடத்துங்கள் என்று நாங்கள் அவர்களிடம் மன்றாடவில்லை. மாறாக, கார்ப்பரேட்டுகளால் நலன்களுக்காக முன்தள்ளப்படும் இந்துத்துவ நடவடிக்கைகளுக்கு சவால் விடுகிறோம். எனவே எங்களைத் திருப்பித் தாக்குவதற்கு ஒரு வாய்ப்பான தருணத்தை எதிர்பார்த்து இந்துத்துவ சக்திகள் காத்திருப்பார்கள் என்றே நாங்கள் கருதுகிறோம்.

ஆம். அரசியல் சாசனம் இருக்கிறது, சட்டங்கள் உள்ளன, நீதிமன்றங்களும் இருக்கின்றன. இவையெல்லாம் இருப்பதன் காரணமாக நீதியும் நிலவுகிறது என்று பொருள் அல்ல. உரிமைகளை நாம் வென்றுதான் பெற வேண்டும். போராடும் உறுதியிருந்தால் வெல்ல முடியும். இந்த சிறிய வெற்றி நம்மை மெத்தனத்துக்கு இட்டுச்சென்று விடக்கூடாது. மாறாக போராட்டத்தைத் தொடர்வதற்கான உந்துதலைத் தரவேண்டுமெனக் கருதுகிறோம்.

இந்தப் போராட்டத்தில் எங்களுடன் நின்ற அனைவருக்கும் எங்கள் நன்றியை உரித்தாக்குகிறோம். சமூகத்தின்பால் நாங்கள் கொள்ளவேண்டிய பொறுப்புணர்ச்சியை இந்த அனுபவம் மேலும் அதிகரிக்கச் செய்திருக்கிறது.

-இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The Ambedkar Periyar Study circle has issued a statement on their victory in the recent struggle against the ban imposed by the Madras IIT.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X