அட கடவுளே.. இப்படி ஒரு நிலைமை மட்டும் யாருக்குமே இனி வந்துடக் கூடாது!
மகளுக்கு பாரமாக இருக்ககூடாது என நினைத்து தம்பதி விஷம் அருந்தினர்.
அரியாங்குப்பம்: முதியோர்கள் என்பவர்கள் ஒருவகையில் வயது முதிர்ந்த குழந்தைகள்தான்!
வாழ்க்கை முறையில் பல்வேறு நெருக்கடிகளை சமாளித்தும், உடல் உள ரீதியாக சவால்களை எதிர்கொண்டும் வந்தவர்கள்! அப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்த ஒரு வயதான தம்பதி செய்த காரியம் அனைவரையும் உறையவே செய்துள்ளது.
அரியாங்குப்பம் மணவெளியில் திலிபன் நகர் உள்ளது. இந்த இடத்தை சேர்ந்தவர் தாமோதரன், வயது 80. இவரது மனைவி பத்மினி. இவருக்கு வயது 74. இவருக்கு கோமதி என்ற மகள் இருக்கிறார். கல்யாணம் ஆகிவிட்டாலும், தன் தாய்-தகப்பனுடனேயே கோமதி கணவருடன் வசித்து வருகிறார். தாமோதரன் ஒருகாலத்தில் ஓஹோவென மரியாதையுடன் வாழ்ந்தவர். பொதுப்பணித்துறையில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

சிகிச்சையில் பெற்றோர்
காலம் மாறியது.. கோலமும் மாறியது... தாமோதரனுக்கு சிறுநீரக பாதிப்பும், பத்மினிக்கு சர்க்கரை நோய் பாதிப்பும் ஏற்பட்டது. இருவரும் அதற்காக சிகிச்சை எடுத்து கொண்டு வந்தனர். இது போதாதென்று கோமதிக்கும் உடலில் பல்வேறு தொந்தரவுகள் உள்ளன. அதனால் அவரும் மருந்து, மாத்திரை என சிகிச்சையில் உள்ளார். தன்னையும் கவனித்து கொண்டு, பெற்றோரையும் கோமதி பார்த்து கொண்டார். பெற்றோர்களுக்கென தனி அறை ஒதுக்கி நேரம் தவறாமல் மருந்துகளை கொடுத்து வந்துள்ளார்.

வாயில் நுரை
இந்த நிலையில், பெற்றோர்களின் அறைக்கதவு பொழுதுவிடிந்தும் நீண்ட நேரம் திறக்கப்படவேயில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கோமதி, அறையை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தார். அப்போது, தாமோதரன், பத்மினி இருவரும் வாயில் நுரைதள்ளிய படி மயங்கிய நிலையில் கட்டிலில் விழுந்து கிடந்தனர்.

அபாய கட்டம்
இதனால் அதிர்ச்சி அடைந்த கோமதி அலறி துடித்தார். சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடிவந்து அவர்களை மீட்டு, புதுவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் தாமோதரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பத்மினிக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனால் அவரும் அபாய கட்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல் அறிந்த அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், பெற்றோர் இருவரும் தனது மகளுக்கு இனியும் சுமையாக இருக்கக்கூடாது என நினைத்து விஷம் குடித்தது தெரியவந்தது.

விடுதலையா? தண்டனையா?
மெழுகுவர்த்தியாக உருக்கிகொண்டு தனது குடும்பத்திற்கு வெளிச்சத்தை கொடுத்த இன்று பல முதியவர்கள் உடல், மன ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது யதார்த்த உண்மைதான்! அவர்களை பாடுபட்டாவது காப்பாற்றி கவனிக்கும் கோமதி போன்ற பிள்ளைகளும் இன்று இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அதேநேரத்தில் பிள்ளைகளுக்கு பாரமாக இருந்துவிட கூடாது என்று நினைத்து உயிரை விட துணிவது, அந்த பிள்ளைகளுக்கு பெற்றோர் தரும் தண்டனையா? விடுதலையா? அனைத்தையும் கடந்துவந்த பெற்றோர்கள்தான் இதனை யோசித்து பார்க்க வேண்டும்!












Click it and Unblock the Notifications